புதுடெல்லி,
நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபான கடைகளை மூட சுப்ரீம் கோர்ட்டு இன்று உத்தரவு பிறப்பித்தது.
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் ஏப்ரல் மாதத்திற்கு பின்னர் மதுபான கடைகளுக்கு அனுமதி வழங்க கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. மதுகடைகளை திறப்பதற்கு புதியதாக உரிமம் வழங்க கூடாது. நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபான கடைகளின் உரிமத்தை புதுப்பிக்கப்பட கூடாது எனவும் உத்தரவிட்டது. நெடுஞ்சாலையில் இருந்து 500 மீ தொலைவிற்கு எந்த மதுகடையும் இருக்க கூடாது. மதுபான பதாகைகள் மற்றும் விளம்பரங்கள் அகற்றப்பட வேண்டும். நாடு முழுவதும் மார்ச் 31-ம் தேதிக்குள் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுகடைகளை அகற்ற வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
இதுதொடர்பான உத்தரவுகளை மாநில தலைமை செயலாளர்கள் மற்றும் போலீஸ் தலைமை அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
விபத்தினை ஏற்படுத்தும் மதுபானங்களில் இருந்து, பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளை இழுத்து மூட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
மதுபான கடைகள் தொடர்பான பல்வேறு ஐகோர்ட்டுகளின் உத்தரவுகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணை செய்த சுப்ரீம் கோர்ட்டு இத்தகைய உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது. நெடுஞ்சாலைகளில் இருந்து வெகு தொலைவில் மதுபான கடைகள் இருக்க வேண்டும், அப்போது தான் பயணிகள் அதனை அணுக முடியாது என்ற வகையில் ஐகோர்ட்டுகளின் முந்தைய தீர்ப்பு இருந்தது.