சனி, 1 ஜூலை, 2017

வேண்டுமென்றே நிறுத்தப்பட்டதா டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை! June 30, 2017




நாளை முதல் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. வரி நடைமுறைக்கு வரவுள்ள நிலையில் இன்று தமிழகத்தில் குறிப்பாக சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் ஏடிம் மையங்கள், கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்ட் போன்ற டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முடங்கியுள்ளது. 

பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாளை (ஜூலை 1, 2017) முதல் நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவைக்கான ஜி.எஸ்.டி. வரி நடைமுறைக்கு வரவுள்ளது. இந்த ஜி.எஸ்.டி. வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தொழிற்துறையினர் மற்றும் வியாபாரிகள் தொடர் போராட்டங்களிலும் வேலை நிறுத்தப் போராட்டங்களிலும் ஈடுபட்டுவருகின்றனர். 

இந்நிலையில் இன்று பொருட்களை வாங்கினால் மட்டுமே குறைந்த விலையில் வாங்க முடியும் என்பதால் வணிக வளாகங்கள் மற்றும் சந்தைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுவருகின்றது. ஆனால் இன்று சென்னை உள்ளிட்ட பல்வேறு பெருநகரங்களில் வழக்கமாக இயங்கிவரும் ஏடிஎம் மையங்கள் செயல்படாமல் உள்ளது. மேலும் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளை ஸ்வைப்பிங் செய்யும் கருவிகளும் செயல்படவில்லை என காரணம் கூறி வாடிக்கையாளர்களிடமும், பொதுமக்களிடமும் வியாபாரிகள் பணமாக வசூலிக்கின்றனர். இதனால் கையில் பணமில்லாத மக்கள் பொருட்களை வாங்க முடியாமலும் ஹோட்டலுக்கு சென்று சாப்பிட முடியாலும் தவித்துவருகின்றனர். 

திட்டமிட்டே வணிகர்கள் ஸ்வைபிங் கருவிகள் வேலை செய்யவில்லை என கூறுகின்றனர் என பல்வேறு தரப்பு மக்களும் புகார் கூறுகின்றனர். ஜி.எஸ்.டி வரி நடைமுறைக்கு வரவுள்ள நிலையில் ஏடிஎம் மையங்களும், ஸ்வைபிங் கருவிகளும் செயல்படாமல் உள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பெரும் குழப்பத்திற்கும் பிரச்சனைக்கும் உள்ளாகியுள்ளனர்.