திங்கள், 31 ஜூலை, 2017

பொது விநியோக திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என அமைச்சர் விளக்கம்! July 31, 2017

பொது விநியோக திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என அமைச்சர் விளக்கம்!


பொது விநியோக திட்டத்தில் இப்போதுள்ள நடைமுறையே தொடரும் என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

தேசிய உணவு பாதுகாப்பு சட்ட விதிமுறைகளை கடந்த 2013-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது. இதனடிப்படையில் மாநிலங்கள் பொதுவிநியோக திட்டத்தில் உணவு விநியோகம் செய்ய வேண்டும் என விதிகள் வகுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்ட விதிகள் தமிழகத்திற்கு பொருந்தாது என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களுக்கு விளக்கமளித்த அவர், தமிழகத்துக்கு தேவையில்லாத திட்டத்தை தமிழகத்தில் கடைபிடிக்க தேவையில்லை என்று கூறினார். 

மத்திய அரசின் தொடர் அழுத்தம் காரணமாகவே இந்த திட்டத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏற்றுக்கொண்டதாகவும், ஆனால், மாநில நிதியிலிருந்து செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு தடை விதிக்க கூடாது எனும் நிபந்தனை அடிப்படையில் செயல்படுத்தப்படுவதாகவும் கூறினார். 

இந்திய அளவில் உணவு பாதுகாப்பு திட்டம் மற்றும் இலவச அரிசி என இரண்டு திட்டங்களை நடைமுறைப்படுத்தும் மாநிலமாக தமிழகம் விளங்குவதாக கூறிய அமைச்சர், உனவு பாதுகாப்பு திட்டத்தில் ஏற்கனவே உள்ள நடைமுறையே தொடரும் என்று தெரிவித்தார்.