வெள்ளி, 28 ஜூலை, 2017

கேரளாவில் பாஜக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் இடையே பயங்கர மோதல்! July 28, 2017




கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் வீட்டில் கல்லெறிந்து தாக்குதல் நடத்தப்பட்டதில் வாகனங்கள் சேதமடைந்துள்ளன. 

கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் பாஜகவினருக்கும் அவ்வப்போது மோதல் நடைபெற்று வருகிறது. இந்த மோதலுக்கு முடிவுகட்ட வேண்டும் என்று இரு கட்சித் தலைவர்களும் தெரிவித்தாலும் அது முடிவின்றித் தொடர்கிறது. 

நேற்றிரவு திருவனந்தபுரத்தில் பாஜகவின் மாநிலத் தலைமையகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்களால் அடித்து சூறையாடப்பட்டுள்ளது. இதற்குப் பதிலடியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் வீட்டை பாஜக தொண்டர்கள் தாக்கியுள்ளனர். 

கல்லெறிந்ததில் வீட்டின் சன்னல் கண்ணாடிகளும், கார் கண்ணாடிகளும் உடைந்து நொறுங்கின. இதேபோல் இரு கட்சிகளைச் சேர்ந்த மாநகராட்சி உறுப்பினர்களின் வீடுகளும் வாகனங்களும் தாக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் இரு கட்சித் தொண்டர்களுக்கிடையே மோதலும் நடைபெற்றுள்ளது. இதையடுத்துத் தலைவர்களின் வீடுகளுக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.