சனி, 29 ஜூலை, 2017

​குஜராத்தில் ஒரு கூவத்தூர் - எம்.எல்.ஏக்களை பதுக்கும் காங்கிரஸ்! July 29, 2017



குஜராத்தில் எம்.எல்.ஏக்கள் கட்சி மாறுவதைத் தடுக்க எம்.எல்.ஏக்களை பதுக்கும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குஜராத் மாநிலத்தில் 3 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஆகஸ்ட் 8ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 5 பேர் பாஜகவிற்கு சென்றுவிட்டனர். ஏற்கனவே, காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரும், முன்னாள் முதல்வரும், நடப்பு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்த வகீலா இரண்டு வாரங்களுக்கு முன்பு காங்கிரஸில்  இருந்து விலகினார். 

வகீலாவுக்கு ஆதரவாக காங்கிரஸில் 11 எம்.எல்.ஏக்கள் இருப்பதாக கருதப்படுகிறது. ஏனெனில் நடந்து முடிந்த குடியரசுத்தலைவர் தேர்தலில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 11 பேர் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்தது தெரியவந்தது.

மேலும், வகீலாவின் உறவினரும், காங். எம்.எல்.ஏவுமான பல்வந்த் சிங் நேற்று காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். பாஜகவில் இணைந்த உடனே நடக்க இருக்கும் மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸுக்கு எதிராக வேட்பாளராக அவரை நிறுத்தியது பாஜக.
காங்கிரஸ் கட்சியிலிருந்து கட்சி மாறியிருப்பவர்கள் எல்லோருமே முக்கியமான பொறுப்பில் இருந்தவர்கள். சங்கீர்சிங் வகீலா எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர், பல்வந்த்சிங்க் கொறடா, தேஜாஷ்ரீபென் துணைக்கொறடா. இப்படி கட்சியின் மிக முக்கியமான தலைவர்களே கட்சி மாறியிருக்கிறார்கள்.

இப்படி அதிரடி காட்சிகள் நிறைந்ததாய் மாறியிருக்கும் குஜராத் அரசியலில் அடுத்து என்ன புயல் வீசும் என அரசியல் பார்வையாளர்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சி மேலும் சில எம்.எல்.ஏக்கள் அணி மாறுவதைத் தடுக்கும் வகையில் சுமார் 11 எம்.எல்.ஏக்களை ‘கூவத்தூர்’ பாணியில் ரிசார்ட் ஒன்றில் தங்கவைத்துள்ளது. 25 எம்.எல்.ஏக்கள் விடுதி ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரையும் இன்று இரவோடு இரவாக தனி விமானம் மூலம் பெங்களூரு அழைத்துச் செல்ல காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

குஜராத்தில் மொத்தமுள்ள 182 இடங்களில் காங்கிரஸுக்கு 57 எம்.எல்.ஏக்கள் இருந்தனர். தற்போது பலம் 51 ஆக குறைந்துள்ளது. ஒரு மாநிலங்களவை உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க 47 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும்.

எம்.எல்.ஏக்கள் அணி மாறிவரும் வேளையில் காங்கிரஸ் பாஜகவை கடுமையாக சாடி வருகிறது. காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அபிக்னேஷ் சிங்வி, “பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறது. பாஜகவின் நாடகம் அம்மணமாகத் தெரிகிறது” என்று வார்த்தைகளால் கிழித்துள்ளார்.

மேலும், எம்.எல்.ஏக்கள் கட்சி மாறினால், கட்சி மாறும் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், 6 ஆண்டுகளுக்கு எம்.எல்.ஏ தேர்தலில் நிற்க தடை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கு பதில் அளித்துள்ள மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ‘’காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியிருப்பவர்கள் அனைவருமே முக்கியப் பொறுப்பில் இருந்தவர்கள்? அவர்களை விலைக்கு வாங்க முடியும் என காங்கிரஸ் நினைக்கிறதா? காங்கிரஸ் பாஜகவை குற்றம் சாட்டுவது நகைச்சுவையானது” என்று பதில் அளித்துள்ளார்.