புதன், 26 ஜனவரி, 2022

வலிமையான லோக்பால் அமைப்பை வெகுகாலமாக சி.பி.எம். வலியுறுத்தி வருகிறது – சீதாராம் யெச்சூரி

  கேரளாவில் சிபிஐ(எம்) தலைமையிலான அரசு கேரளா லோக்ஆயுக்தா சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவருவதாக அறிவித்துள்ளது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஏன் என்றால் இந்த கட்சி தேசிய அளவில் எபோதும் வலிமையான செயல்திறன் மிக்க லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தா அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகளை வைத்து வந்தது.

போபர்ஸ் ஊழல் வெளிச்சத்துக்கு வந்த போதில் இருந்தே சி.பி.ஐ(எம்) கட்சி வலிமையான லோக்பால் அமைப்புகளை நாட்டில் உருவாக்க வேண்டும் என்று கோரிக்கையை தொடர்ந்து முன்வைத்தது என்று அக்கட்சியின் பொதுசெயலாளர் சீதாராம் யெச்சூரி அடிக்கடி கூறுவதுண்டு. ஐக்கிய முன்னணி அரசு (1996) மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி (2004) அரசுகளின் காமன் மினிமம் ப்ரோகிராம்களில் லோக்பால் அமைப்பு இடம் பெறுவதை கட்சி உறுதி செய்தது என்றும் அவர் கூறுவதுண்டு.

ஐக்கிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் போது 2011ம் ஆண்டு மத்திய அரசு அன்னா ஹசாரேவுடன் லோக்பால் சட்ட வரைவுக்காக கலந்துரையாடியது. இந்த விவகாரத்தில் சி.பி.ஐ.(எம்) கட்சியின் நிலைப்பாடு எத்தகையது என்பதை தெளிவாக அறிக்கை ஒன்றில் வெளியிட்டது அக்கட்சி.

லோக்பால் அடிப்படையில் ஒரு உண்மை கண்டறியும் அமைப்பாக இருக்க வேண்டும், அது ஊழல் நடந்திருப்பதை உறுதி செய்யும் பட்சத்தில் புகார்களை பெற்று, விசாரணை நடத்தி, தேவையான இடத்தில் வழக்குகளை சிறப்பு நீதிமன்றங்களுக்கும் அனுப்புகிறது. தானாக முன்வந்து வழக்கை விசாரிக்க அதற்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

லோக்பால் தேவையான நடவடிக்கைகளை நிறைவேற்ற பரிந்துரைகளை வழங்கவும், அந்த பரிந்துரைகள் ஏற்றக்கொள்ளப்படவில்லை என்றால் நீதிமன்றத்தை அணுகவும் அதிகாரத்தை பெற்றிருக்க வேண்டும். இத்தகைய செயல்பாடுகளை நிறைவேற்ற பாதி-நீதி அதிகாரங்களையும், முழுமையாக இயங்க சுதந்திரமாக செயல்படும் தன்மையையும் இந்த அமைப்பிற்கு வழங்க வேண்டும் என்றும் கூறியது.

மத்தியில் லோக்பால் அமைப்பைப் போன்று, மாநிலங்களில் லோக் ஆயுக்தாக்களை அமைக்க வேண்டும். அனைத்து அரசு ஊழியர்களும் அதன் வரம்பின் கீழ் கொண்டு வர வேண்டும் என்றும் லோக்பால் வரம்பில் பிரதமரையும் இணைக்க வேண்டும் என்றும் அக்கட்சி அறிவித்தது.

ஆகஸ்ட் 27 அன்று, லோக்பால் தொடர்பான விவாதத்தின் போது கட்சியின் நிலைப்பாட்டை யெச்சூரி வெளிப்படுத்தினார். “1996ல் ஐக்கிய முன்னணி அரசாங்கம் வந்தபோது, ​​குறைந்தபட்ச பொதுத் திட்டம் (Common Minimum Programme) வரைவு உருவாக்கப்பட்டது. அதில் எங்கள் கட்சியினருக்கும் பங்கு இருந்தது…” என்று கூறிய அவர். “இந்த குறைந்தபட்ச பொதுத்திட்டம் குறித்து நாங்கள் கூறியது என்ன? ‘ஊழலற்ற நிர்வாகத்தை வழங்க ஐக்கிய முன்னணி உறுதிபூண்டுள்ளது. பதினோராவது மக்களவையின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடரில் லோக்பால் அமைப்பதற்கான மசோதாவை அறிமுகம் செய்ய வேண்டும்…” என்று நான் கூறினேன் என்று குறிப்பிட்டார் யெச்சூரி.

2004ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைட்த்ஹ போது ​​லோக்பால் அமைப்புமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்திய வரைவில் நாங்கள் ஒரு கட்சியாக இருந்தோம். எனவே இடதுசாரிகள் இந்த அமைப்பு வேண்டும் என்று கூறியும், அதற்காக தொடர்ந்து ஆதரவையும் வழங்கினோம் என்றார்.

2011ம் ஆண்டு இந்த சட்டம் நிறைவேற்றப்படவில்லை. 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. சிபிஐ(எம்)… லோக்பால் மற்றும் மாநில அளவில் லோக் ஆயுக்தாக்கள் நிறுவப்பட வேண்டும் என்பதற்காக தொடர்ந்து போரிட்டது என்று சில நாட்கள் கழித்து அக்கட்சியின் அதிகாரப்பூர்வ இதழான People’s Democracy-ல் குறிப்பிடப்பட்டிருந்தது.

மக்களாகிய நாம் கூட்டாக நமது சமூகத்தில் சமூக உணர்வின் அளவை உயர்த்தும்போதுதான் ஊழலை திறம்பட சமாளிக்க இயலும்.
இதற்கு அரசியல் அறநெறி தேவைப்படுகிறது. ஆனால் தற்போது இடதுசாரிகள் தவிர்த்து இதர பெரிய கட்சிகளில் இது வெளிப்படையாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

2016ம் ஆண்டு இந்த சட்டங்களில் திருத்தங்களை ஏற்படுத்தியது என்.டி.ஏ. கட்சி. மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகள், துணைகளின் சொத்துகள் மற்றும் கடன் விபரங்களை தாக்கல் செய்வதில் இருந்து விதிவிலக்கு பெற இந்த திருத்தம் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு கடுமையான எதிர்ப்பை அன்றும் பதிவு செய்தது சி.பி.ஐ.(எம்) கட்சி

source https://tamil.indianexpress.com/explained/at-national-level-cpm-always-sought-strong-anti-corruption-ombudsman-402297/