திங்கள், 24 ஜனவரி, 2022

105 படகுகளை ஏலம் விடும் இலங்கை அரசு – கொதித்தெழுந்த தமிழக மீனவர்கள்

 

கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றச்சாட்டி அவர்களை கைது செய்வதோடு படகுகளையும் பறிமுதல் செய்து வருகிறது.

அந்த வகையில், பறிமுதல் செய்யப்பட்ட 100க்கும் மேற்பட்ட படகுகளை, இலங்கை அரசு அந்தந்த கடற்படை முகாம்களில் ஏலம் விடப்படவுள்ள தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகள் கூற்றுப்படி, பிப்ரவரி 7 முதல் 11 வரை பொது ஏலம் நடைபெறவுள்ளது.

பல ஆண்டுகளாக கைப்பற்றப்பட்ட படகுகள் கடற்படையினரால் நங்கூரமிட்டு வைக்கப்பட்டுள்ளதால், பெரும்பாலும் பகுதியளவில் சேதமடைந்தும் அல்லது பயன்படுத்த முடியாத நிலையிலும் உள்ளதாக கூறப்படுகிறது.

கிடைத்த தகவலின்படி, 105 இழுவை படகுகளில் 65 காரைநகரிலும், 24 கிரஞ்சியிலும், ஒன்பது தலைமன்னாரிலும், 5 காங்கேசன்துறையிலும், 2 கல்பிட்டியிலும் வைக்கப்பட்டுள்ளன. இலங்கை அரசின் இந்த முடிவுகள், தமிழக மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ராமேசுவரம் விசைப்படகு மீனவர் சங்க தலைவர் தேவதா கூறுகையில், ” இந்திய அரசு இலங்கைக்கு பண உதவி செய்து வருகிறது. ஆனால் இலங்கை அரசு எங்களது வாழ்வாதரத்துக்கு முக்கியமான படகுகளை ஏலம் விடுகிறது. இதனை மத்திய அரசு உடனடியாகத் தடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.

மேலும், அனைத்து இயந்திர படகு மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் என்.ஜே.போஸ் கூறுகையில், ஏழு ஆண்டுகளாக படகுகள் செயலிழந்து கிடப்பதால் சேதம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு இனியும் அமைதியாக இருக்கக் கூடாது என்றார்.

இந்த விவகாரம் குறித்து குரல் கொடுத்துள்ள பாமக நிறுவனர் எஸ்.ராமதாஸ், விசிக தலைவர் டி.ரவிக்குமார் எம்.பி ஆகியோர், மத்திய அரசும், மீன்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகனும் உடனடியாக தலையிட்டு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினர்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/lanka-initiates-auction-of-105-seized-trawlers-belong-to-tamil-fisheries-401118/