வியாழன், 27 ஜனவரி, 2022

பிப்ரவரி மாதம் பள்ளிகள் திறக்க பரிந்துரை – அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

 26 1 2022  தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் பிப்ரவரி மாதம் முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்றின் பாதிப்பு மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில், கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதே நிலை தமிழகத்திலும் தொடர்ந்து வரும் நிலையில், வரும் ஜனவரி 31-ந் தேதி வரை தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

ஆனால் தற்போது தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்துள்ளதால் ஊரடங்கு உத்தரவு மேலும் நீடிக்கப்பட் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தற்போது ஜனவரி மாதம் முடிவுக்கு வந்துள்ள நிலையில்.இன்னும் ஒரு மாதத்தில், 10, 11, மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்காக பொதுத்தேர்வு நடத்தப்பட வாய்ப்புள்ளது. ஆனால் பள்ளிகள் தற்போது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், மீண்டும் எப்போது திறக்கப்டும் என்று பெற்றோர்கள் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர்.

மேலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுமா என்ற கேள்வியும் எழுந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று கூறியிருந்தார். அதேபோல், ஒரு சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. வரும் பிப்ரவரி மாதம் பள்ளிகள் திறக்க முதல்வருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். சென்னை திருவல்லிக்கேணியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,

10, 11, மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதம் பள்ளிகள் திறக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அரசுப்பள்ளிகளை தரம் உயர்த்த முதல்வர் பாடுபட்டு வருகிறார். அரசுப்பள்ளிகளை மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். இருமொழி கொள்கைதான் நமது கொள்கை அதில் இருந்து பின்வாங்கமாட்டோம். பொதுத்தேர்வுக்கு முன்பு 2 திருப்புதல் தேர்வு நடத்த திட்டமிட்டிருந்தோம் ஆனால் பிப்ரவரி மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் ஒரு திருப்புதல் தேர்வு மட்டுமே நடைபெறும் என்று கூறியுள்ளார்

soure https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-minister-anbil-mahesh-press-meet-about-school-reopen-402657/