வெள்ளி, 21 ஜனவரி, 2022

யூடியூப்பிற்கு ஏன் மொத்தமாக தடை விதிக்ககூடாது? அறிக்கை சமர்ப்பிக்க சைபர் கிரைம் டிஜிபிக்கு உத்தரவு

 பிரபல யூடியூபர் சாட்டை துரைமுருகன்,மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி, தற்போதைய முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் குறித்து கடுமையாக விமர்சனம் செய்து அவதூறான கருத்துகளை வெளியிட்டதாக ஏற்கனவே வழக்கு பதிவு செய்து,அவர் கைது செய்யப்பட்ட நிலையில்,பின்னர் சாட்டை துரைமுருகனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.

ஆனால்,நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குறுதிப்படி நடந்து கொள்ளாமல் தொடர்ந்து அவர் அவதூறு கருத்துகளை பேசி யூடியூப்பில் வீடியோக்களை பதிவிட்டு வருவதால்,சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை,ஒருவர் தவறு செய்ய துணை புரிந்தால் சட்டப்படி யூடியூப்பும் குற்றவாளிதான். யூடியூப்பை பார்த்து துப்பாக்கி,வெடிகுண்டு தயாரிப்பது,கள்ளச்சாராயம் காய்ச்சுவது என குற்றவாளிகள் பலரும் வாக்குமூலம் தருகின்றனர்.

எனவே,அறிவியல் வளர்ச்சியை தவறாக பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.மேலும்,வெளிமாநிலங்களில் இருந்து தேவையற்ற வீடியோ பதிவு செய்யப்படுகிறது என்றால் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்தது.

மேலும், தவறான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுவதில் யூடியூப் நிறுவனமும் உடந்தையா? ,யூடியூப்பிற்கு ஏன் மொத்தமாக தடை விதிக்க கூடாது? அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா? என்றும் தமிழக அரசுக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

யூடியூப்பில் தவறான வீடியோக்களை பதிவேற்றம் செய்வதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்று கூறிய நீதிபதி, இது தொடர்பாக சைபர் கிரைம் டிஜிபி விரிவான விவரங்களை சேகரித்து ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/madurai-hc-ask-report-from-cybercrime-dgp-for-stop-youtube-crimes-399779/