திங்கள், 24 ஜனவரி, 2022

இந்தியாவில் சமூக பரவலாக மாறியது ஒமிக்ரான்

 24 1 2022 இந்தியாவில் ஒமிக்ரான் சமூக பரவலாக மாறிவிட்டது என மத்திய சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், ‘இன்சாகாக்’ அமைப்பு எச்சரித்துள்ளது.

தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியா தற்போது 3வது அலையை எதிர்த்துப் போராடி வரும் நிலையில், இதன் தினசரி தொற்று எண்ணிக்கை 4 லட்சத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. உருமாற்றமைடைந்த கொரோனா தொற்று வகையான ஒமிக்ரான் டெல்லியில் வேகமாக பரவத் தொடங்கியுள்ளதாகவும், பிஏ.2 எனும் புதிய உருமாற்றத்துடன் பெருநகரங்களில் வேகமாக பரவி வருகிறது எனவும் இன்சாகாக்’ எனப்படும் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த தொற்றைப் பொருத்தவரை லேசான மற்றும் அறிகுறியற்றதாக இருந்தாலும் இப்போதுள்ள அலையில் மருத்துவமனை மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் எண்ணிக்கை அதிகமாக உள்ளது எனவும் அந்த அறிக்கையில் வெளியாகியுள்ளது. இருப்பினும், இதனால் அபாய நிலை ஏற்படாது என நினைத்துக்கொள்ள முடியாததால் மக்கள் அனைவரும் கட்டுப்பாடுகளை மதித்து எச்சரிக்கையாக நடப்பது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வகை தொற்று வெளிநாட்டிலிருந்து வந்தவர்களிடம் இருந்து மட்டுமல்லாமல், உள்நாட்டில் உள்ளவர்களிடம் இருந்தும் பரவும் விதத்தில் இருக்கும் என தெரிவித்துள்ளது. இதனால், ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவில் சமூகப் பரவல் கட்டத்திற்கு வந்திருப்பதாக மத்திய சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், ‘இன்சாகாக்’ எனப்படும் அமைப்பு எச்சரித்துள்ளது. மேலும், இந்த பிஏ.2 எனும் புதிய வகை தொற்று  இந்தியா, டென்மார்க் உள்பட 40 நாடுகளில் பரவியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சமீபத்தில் தோன்றிய B.1.640.2 வகை கொரோனா குறித்து கண்காணித்து வருவதாகவும். அந்த வகை கொரோனாவால் இந்தியாவில் தற்போது வரை யாரும் பாதிக்கப்படவில்லை எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

source https://news7tamil.live/omicron-became-community-transmission-in-india.html