செவ்வாய், 18 ஜனவரி, 2022

தடுப்பூசி கட்டாயம் இல்லை… சான்றிதழ் அவசியமில்லை; சுப்ரிம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்

 

இந்தியா கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தை ஓராண்டு நிறைவு செய்வதற்கு சில நாட்களுக்கு முன்பு, அனுமதியின்றி தடுப்பூசி போடுவதையோ அல்லது எந்த நோக்கத்திற்காகவும் தடுப்பூசி சான்றிதழை கட்டாயமாக்க வழிகாட்டுதலையோ வெளியிடவில்லை என்று அரசாங்கம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு சார்பில், ஜனவரி 13ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், எந்தவொரு நபரையும் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக தடுப்பூசி போடுமாறு கட்டாயப்படுத்த முடியாது என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எந்த நோக்கத்திற்காகவும் தடுப்பூசி சான்றிதழை வைத்திருப்பதை கட்டாயமாக்கும் எந்த வழிகாட்டுதல்களையும் இந்திய அரசு வெளியிடவில்லை” என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

“இந்திய அரசு, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகளின்படி, சம்பந்தப்பட்ட நபரின் அனுமதி பெறாமல் வலுக்கட்டாயமாக தடுப்பூசி போடக்கூடாது என்று பணிவுடன் சமர்ப்பிக்கப்படுகிறது” என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. “தற்போதைய தொற்றுநோய் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு கோவிட்-19 தடுப்பூசி போடுவது பெரிய பொது நலன் சார்ந்தது அடிக்கோடிட்டுக் காட்டிய மத்திய அரசு அனைத்து குடிமக்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும், மேலும் அதை எளிதாக்கும் வகையில் அமைப்புகளும் செயல்முறைகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், எந்தவொரு நபரும் அவர்களின் விருப்பத்திற்கு எதிராக தடுப்பூசி போடும்படி கட்டாயப்படுத்த முடியாது.” என்று தெரிவித்துள்ளது.

அரசாங்கம் கோவிட்-19 தடுப்பூசிக்கான செயல்முறை வழிகாட்டுதல்களை வகுத்துள்ளது. அதன்படி “கோவிட்-19 தடுப்பூசிக்குப் பிறகு ஏற்படக்கூடிய பாதகமான நிகழ்வுகள் குறித்து அனைத்து பயனாளிகளுக்கும் தெரிவிக்கப்பட வேண்டும் என்று அது கூறியது.

பாஸ்போர்ட் தடுப்பூசி கட்டாயம்

அரசாங்கமும் வணிக நிறுவனங்களும் தடுப்பூசி போடுவதை அமல்படுத்த முயற்சி செய்து வருகின்றன. பொது இடங்களில் தடுப்பூசி போடாதவர்களின் நுழைவைக் கட்டுப்படுத்துகின்றன. “பாஸ்போர்ட்டுக்கு தடுப்பூசி கட்டாயம்” என்பது உலகம் முழுவதும் விவாதிக்கப்படுகிறது.

சில மாநிலங்கள் தடுப்பூசி போடுவதற்கு மற்றுக்கும் மக்களுக்கு சலுகைகளை நிறுத்துவதற்கு உத்தரவுகளை பிறப்பித்துள்ளன. உள்ளூர் ரயில்களில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று மகாராஷ்டிரா மாநில அரசு கூறியது. தடுப்பூசி போடப்படாத நபர்களுக்கு கோவிட் -19 சிகிச்சைக்கான செலவை அரசு ஏற்காது என்று கேரள மாநில அரசு கூறியது.

மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி போடுவதற்கு வசதியான கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும், தடுப்பூசி போடும் செயல்முறையை மாற்றுத்திறனாளிகள் சரியாக அணுகுவதை உறுதி செய்வதற்கும் எந்தவொரு உறுதியான நடவடிக்கைகளையும் வகுக்க எலுரு அறக்கட்டளை தாக்கல் செய்த மனுவில் நீதிமன்றம் அனுமதித்த இந்த வழக்கில், மத்திய அரசால் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

பரிந்துரைகளைப் பெற்று பரிசீலித்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜனவரி 11, 2022 நிலவரப்படி, மொத்தம் 1,52,95,43,602 டோஸ்கள் வழங்கப்பட்டதாகவும், தகுதியான வயது வந்தோரில் 90.84 சதவீதம் பேர் தடுப்பூசியின் முதல் டோஸ் பெற்றுள்ளதாகவும் வயது வந்தோரில் 61 சதவீதம் பேர் இரண்டாவது டோஸ் பெற்றுள்ளதாகவும் மத்திய சுகாதார குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தடுப்பூசி செலுத்திக்கொள்வதில், மொத்தம் 23,678 மாற்றுத்திறனாளிகள் தானாக முன்வந்து அவர்களின் தனிப்பட்ட மாற்றுத் திறனாளி அடையாள அட்டை/சான்றிதழுடன் வந்து தடுப்பூசி போட பதிவு செய்வதற்காகப் பயன்படுத்தியுள்ளனர்.

பரிந்துரைக்கப்பட்ட அடையாள அட்டைகள் எதுவும் இல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு, “Co-WIN இல் எளிதாக்கப்பட்ட கோஹார்ட் பதிவு செயல்முறையைப் பின்பற்றுவதன் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று மத்திய அரசு கூறியது.

“கோ-வின் தளம் சிறப்பு தடுப்பூசி அமர்வுகளை உருவாக்குவதற்கான வசதியை வழங்குகிறது. மேலும், இந்த தடுப்பூசி அமர்வுகள், பயனாளிகளின் பதிவு தகவலைக் கொண்டிருக்கும். அதில், மொபைல் எண், புகைப்பட அடையாள அட்டையை கட்டாயமாக்காமல் எளிதாக்கப்பட்ட கூட்டுப் பதிவு தடுப்புசி சிறப்பு அமர்வுகளில் அனைத்து தடுப்பூசி இடங்களும் எளிதாக தடுப்பூசி போடுவதற்கு ஒதுக்கப்படும்” என்று மத்திய அரசின் பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

“06.01.2022 தேதி நிலவரப்படி, தேசிய கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தின் கீழ் எந்தவித அடையாள அட்டையும் இல்லாமல் மொத்தம் 58,81,979 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/india/vaccination-supreme-court-no-forced-jabs-not-must-certificate-398354/