ஞாயிறு, 2 அக்டோபர், 2022

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்திற்கு சீல்: தமிழக காவல்துறை அதிரடி

 02 10 2022

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்திற்கு சீல்: தமிழக காவல்துறை அதிரடி

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாநில தலைமை அலுவலகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்கிற அமைப்பிற்கு சொந்தமான அலுவலங்கள் மற்றும் நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவை சேர்ந்த 45 அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.

மத்திய அரசு இந்த இயக்கத்தை ஐந்து ஆண்டுகளுக்கு தடை விதித்துள்ளது. இந்த நிர்வாகம் மற்றும் அதனுடைய துணை அமைப்புகள் என ஐந்து அமைப்புகளுக்கு இந்த தடை பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, மத்திய அரசின் உத்தரவை உறுதி செய்யும் வகையில், தமிழக அரசும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை மேற்கோள் காட்டி அரசாணையை வெளியிட்டுள்ளது.

இந்த சூழலில், தடை செய்யப்பட்ட நிறுவனம் பொது இடங்களில் இயங்கினால் சட்டத்திற்கு எதிரானதாக கருதப்படும்.

மேலும், வருவாய்த்துறை அதிகாரி, மாநகராட்சி உதவி ஆய்வாளர், கட்டிடத்தின் உரிமையாளர் மற்றும் காவல் துறை முன்னிலையில், சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/purasaivakkam-main-office-of-popular-front-of-india-got-sealed-on-1st-october-519102/