வெள்ளி, 22 ஏப்ரல், 2016

நீதித்துறையோடு விளையாடிப் பார்ப்போம் என்ற எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது?


Art 356: இந்திய நீதித்துறை மீதே நம்பிக்கை சீர்குலைய தொடங்கியிருக்கும் சூழ்நிலையில், இதோ நாங்கள் இருக்கிறோம் என்று இந்திய அரசியல் சாசனத்தை உயர்த்தி பிடித்து எழுந்து நிற்கிறார் உத்தராகாண்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதி கே எம் ஜோசப்.
லயோலாவில் படித்தவர். கேரளா ஐகோர்ட்டில் பத்தாண்டுகள் பணியாற்றியவர். தந்தை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பணியாற்றியவர்.
உத்தராகாண்டில் காங்கிரஸ் அரசை கலைத்த வழக்கில் நேற்றும் இன்றும் ஜோசப் எழுப்பிய சாட்டையடி கேள்விகளால் திகைத்து நிற்கிறது மோடி அரசு. அநீதிக்கு எதிராக நீதியரசன் வாள் சுழல்வதை பாருங்கள்:
ஜனாதிபதி உத்தரவு போட்டுவிட்டால் அதை யாரும் கேள்வி கேட்க முடியாதா? யார் சொன்னது? முன்பு அப்படி இருந்திருக்கலாம். இப்போது இல்லை.
ஒரு உத்தரவு சட்டப்படி சரியா தவறா என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தை அரசியல் சாசனம் வழங்கியிருப்பது கோர்ட்டுக்குதானே தவிர ஜனாதிபதிக்கு அல்ல.
ஒரு மாநில அரசை கலைத்து அங்கே மத்திய அரசின் அதிகாரத்தை நிறுவ ஜனாதிபதி தனது அரசியல் ஞானத்தின் அடிப்படையில் முடிவு எடுத்தார் என்று சொல்வதை ஏற்க முடியாது.
ஜனாதிபதியும் மனிதர்தான். தவறே செய்யாத மனிதன் இருக்க முடியாது. நாங்களும் தவறு செய்கிறோம். அதனால்தானே மேல்கோர்ட்டுக்கு போகிறீர்கள்? ஜனாதிபதி ஆணைக்கு மட்டும் அப்பீலே கிடையாது என்றால் எப்படி?
ஜனாதிபதி ரொம்ப ரொம்ப நல்லவராக இருக்கட்டும். அபாரமான அறிவாளியாக இருக்கட்டும். அதெல்லாம் தவறு செய்ய மாட்டார் என்பதற்கு உத்தரவாதம் ஆகுமா?
ஒரு மாநில அரசு மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டது. அது மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது என சிலர் சொல்கிறார்கள். கவர்னரிடம் மனு கொடுக்கிறார்கள். அவர் முதலமைச்சருக்கு உத்தரவு போடுகிறார். சட்டசபையை கூட்டி உனக்கு மெஜாரிடி இருப்பதை நிரூபித்து காட்டு என்கிறார். சபாநாயகர் அதன்படி சபையை கூட்டுகிறார்.
நாளை ஓட்டெடுப்பு என்றால் இன்றைக்கு ஆட்சியை கலைத்து ஜனாதிபதி ஆட்சி பிரகடனம் செய்கிறீர்கள். இது என்ன விளையாட்டு?
பதவி பறிக்கப்பட்ட முதல்வர் நியாயம் கேட்டு வந்திருக்கிறார். இந்த வழக்கில் நாங்கள் விசாரித்து தீர்ப்பு சொல்ல வேண்டும். அதற்குள் ஜனாதிபதி ஆட்சியை வாபஸ் பெற்றுக் கொண்டு பிஜேபி ஆளை முதலமைச்சராக நியமித்து புது ஆட்சி அமைக்க மத்திய அரசு திட்டமிடுவதாக அவர் சந்தேகிக்கிறார்.
அப்படி செய்ய மாட்டோம் என உறுதி அளிக்க சொன்னால் மத்திய அரசு தலைமை வக்கீல் அப்படி உறுதி தர இயலாது என்கிறார்.
என்ன நினைத்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசு? கோர்ட்டுடன் மோத தயார் ஆகிறீர்களா? நீதியை சிதைத்து சின்னாபின்னமாக்க நினைக்கிறீர்களா?
விட்டால் இதையே ஒவ்வொரு மாநிலத்திலும் செய்வீர்கள். உங்களுக்கு பிடிக்காத மாநில அரசை கலைத்து ஜனாதிபதி ஆட்சியை பிரகடனம் செய்வீர்கள். பத்து பதினைந்து நாளில் உங்கள் கட்சியில் ஒருவரை தயார் செய்வீர்கள். அவர் முதல்வராக வசதியாக ஜனாதிபதி ஆட்சியை திரும்ப பெறுவீர்கள், அப்படித்தானே?
இந்திய அரசின் மிகவும் உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்கள் இப்படி நடந்து கொண்டால் யாரிடம் போய் சொல்வது? நீதித்துறையோடு விளையாடிப் பார்ப்போம் என்ற எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது?
ஜனாதிபதி ஆட்சி பிரகடனத்தை ரத்து செய்தது உத்தராகாண்ட் ஐகோர்ட்.
நன்றி.
Radhakrishnan KS