சனி, 30 ஏப்ரல், 2016

கேரள முதல்-மந்திரி உம்மன் சாண்டியின் சொத்து கணக்கு

கையிருப்பில் பணமே இல்லை – அசையா சொத்துகள், காரும் கிடையாது: 

dc-Cover-61vatma4n7buqj9jcnj8535a77-20160430014241.Mediதிருவனந்தபுரம்:

கேரள சட்டசபைக்கு வரும் 16-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22-ந்தேதி தொடங்கியது. மாநிலத்தில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள காங்கிரஸ்-முஸ்லிம் லீக் தலைமையிலான கூட்டணியும், ஆட்சியை மீண்டும் பிடிக்க இடதுசாரி இயக்கங்களும் முனைப்பு காட்டி வருகின்றன.

மாநிலத்தில் புதிதாக ஆட்சி அமைக்க பா.ஜ.க.வும் முயன்று வருகிறது. இதனால், அங்கு தேர்தல்களம் சூடுபிடித்துள்ளது. 

இந்நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்யும் கடைசிநாளான நேற்று கேரள முதல் மந்திரி உம்மன் சாண்டி மத்திய திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள புதுப்பள்ளி தொகுதியில் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

தொடர்ந்து பத்துமுறை இதேதொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ள உம்மன் சாண்டி, பதினொன்றாவது முறையாக 2016-சட்டசபை தேர்தலிலும் புதுப்பள்ளி தொகுதியில் போட்டியிடுகிறார்.  

இதையொட்டி, வழக்கமாக செல்லும் தேவாலயம் மற்றும் பெற்றோரின் சமாதிகளுக்கு சென்று பிரார்த்தனை செய்த உம்மன் சாண்டி, தேர்தல் அலுவலர் ஸ்ரீலேகாவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவரது மகன் சாண்டி உம்மன், கோட்டயம் தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜோஸ் மணி உள்பட ஏராளமான காங்கிரஸ் பிரமுகர்கள் வந்திருந்தனர்.

வேட்பு மனுவுடன் நேற்று தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தனது சொத்து விவரங்களை உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, தனது கையிருப்பில் பணமே இல்லை என்று கூறியுள்ளார். அவரிடம் சொந்த காரும் இல்லை. ஆனால், மனைவியிடம் 2010-ம் ஆண்டு மாடல் ‘மாருதி ஸ்விப்ட் டிசையர் கார்’ உள்ளது. உம்மன் சாண்டி பெயரில் ரூ.3 லட்சத்து 21 ஆயிரத்து 40 மதிப்புள்ள அசையும் சொத்துகளும், மனைவி பெயரில் ரூ.32 லட்சம் மற்றும் பிள்ளைகள் பெயரில் ரூ.13 லட்சம் அசையும் சொத்துகளும் உள்ளன.

மனைவியின் ரொக்க கையிருப்பு ரூ. 10,516, தங்க நகைகளின் மதிப்பு ரூ. 8,16,960, வங்கியில் ரொக்க இருப்பு ரூ.10,57,524 என தெரிவிக்கப்பட்டுள்ளது. மனைவி பெயரில் ரூ.75 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துகள் உள்ளன.

உம்மன் சாண்டி பெயரில் அசையா சொத்துகள் ஏதும் இல்லை. 38 கிராம் தங்க நகைகள் மட்டுமே வைத்துள்ளார் உள்ளன. உம்மன் சாண்டியின் 2014-2015ம் நிதியாண்டுக்கான மொத்த வருமானம் ரூ.3 லட்சத்து 42 ஆயிரத்து 230 ஆகும். அவருக்கு கடன் எதுவும் இல்லை. வழக்குகளும் நிலுவையில் இல்லை என பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.