சர்வதேச அளவில் பெட்ரோலிய கச்சாஎண்ணெய் விலை பீப்பாய் ஒன்று 60 அமெரிக்க டாலர்(ரூ.4,050) ஆக உயரும் பட்சத்தில், நம்நாட்டில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ. 80 ஆகவும், டீசல் 68 ஆகவும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளான “ஓபேக்” அமைப்பு தனது பெட்ரோலிய கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்கப் போவதாக சமீபத்தில் ஒப்பந்தம் செய்தது. அதன்பின், பீப்பாய் ஒன்றின் விலை 55 டாலர்கள்(ரூ.3,700) சுற்றியே இருக்கிறது.
இந்நிலையில், ஒபேக் கூட்டமைப்பு, தனது உற்பத்தியை வரும் 2017-ம் ஆண்டு ஜனவரி முதல்தேதி முதல் குறைக்கப் போவதாக அறிவித்துள்ளது. இந்த உற்பத்தி குறைப்பு நாள் ஒன்றுக்கு 12 லட்சம் பீப்பாய்களாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்போது சர்வேதேச அளவில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் தேவை கடுமையாக அதிகரிக்கும். இந்த உற்பத்தி குறைப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டதில் இருந்து சர்வதேச அளவில் ஏற்கனவே விலை 19 சதவீதம் அதிகரித்துவிட்டது. இதில் உற்பத்தி குறைப்பு நடைமுறைக்கு வரும் போது கடுமையான விலை ஏற்றமும், தேவையும் அதிகரிக்கும்.
மேலும், பெட்ரோலிய கச்சாஎண்ணெய் உற்பத்திசெய்து ஏற்றுமதி செய்யும் ஒபேக் கூட்டமைப்பில் சேராத நாடுகளும், நாள்ஒன்றுக்கு 60 ஆயிரம் பீப்பாய்களை குறைக்க ஒப்புக்கொண்டுள்ளன. இது தொடர்பான முடிவு வியன்னாவில் நேற்று எடுக்கப்பட்டது. .
இதனால், மேற்கத்திய நாடுகளில் கிடைக்கும் பிரென்ட் பெட்ரோலிய கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 50 டாலர்கள் முதல் 55 டாலர்களாக விலை உயரும். சில நேரங்களில் தேவையைப் பொறுத்து 60 டாலர்களாகவும் அதிகரிக்கும். அப்போது, இந்தியாவில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ. 80 ஆகவும், டீசல் ஒருலிட்டர் ரூ. 68 ஆகவும் விற்பனையாகும் என்றும் கிரிசில் என்ற ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இது வரும் ஜனவரி மாதத்தில் இருந்தே பாதிப்புகள் தெரியவரும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக பெட்ரோல் தற்போதுள்ள விலையில் இருந்து 5 முதல் 8 சதவீதம் வரை 2017ம் ஆண்டு முதல் 6மாதத்துக்குள் விலை உயரக்கூடும். அதேபோல டீசல் தற்போதுள்ள விலையில் இருந்து, 6 முதல் 8சதவீதம் உயரக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. இதனால், மும்பையில் பெட்ரோல் ரூ. 75 ஆகவும், டீசல் ரூ.64 ஆகவும் உயர வாய்ப்புள்ளது.