
சிபிஎஸ்இபாடதிட்டத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் பொதுத்தேர்வை கட்டாயமாக்க வேண்டும் என சிபிஎஸ்இ நிர்வாகக் குழு பரிந்துரைத்துள்ளது.
இந்தப் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டால் வரும் 2018ம் ஆண்டு முதல் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயமாக்கப்படும். தற்போது உள்ள நடைமுறைப்படி, சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மாணவர்கள் விரும்பினால் பொதுத் தேர்வு எழுதலாம் அல்லது பள்ளியில் நடத்தப்படும் தேர்வை எழுதலாம். அனைவருக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படவேண்டும் என மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவதேகர் முன்பிருந்தே கூறிவருகிறார்.
தற்போது ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மூன்று மொழிகள் பயிற்றுவிக்கப்படும் முறை பத்தாம் வகுப்பு வரை நீட்டிக்கப்படவேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்தி, ஆங்கிலம், மற்றும் ஒரு இந்திய மொழியும் கற்பிக்கப்படவேண்டும் என்றும் வெளிநாட்டு மொழிகள் 4வது மொழியாக விருப்பப் பாடமாக சேர்க்கப்படலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைகள் குறித்த இறுதி முடிவை அரசே எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்த நாள் : December 20, 2016 - 10:16 PM