மத வழிபாட்டுத் தலங்கள் நீதிமன்றம் போல செயல்படுவது தெரியவந்தால் அதைத்தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு, தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அதில், மதவழிபாட்டுத் தலம் ஒன்று, நீதிமன்றத்தைப் போல செயல்பட்டு கட்டாய விவாகரத்து வழங்கிவிட்டதாக மனுதாரர் குற்றம்சாட்டியிருந்தார். மேலும் தன்னை தனது மனைவியுடன் சேர்த்து வைக்குமாறும் மனுவில் கோரியிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் நீதிமன்றத்திற்கு இணையான அமைப்பு செயல்படுவதை அனுமதிக்க முடியாது என்றும், அவ்வாறு நீதிமன்றங்களைப் போல மத வழிபாட்டுத் தலங்கள் செயல்பட்டால், அதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். இந்த வழக்கு விசாரணை ஜனவரி 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பதிவு செய்த நாள் : December 20, 2016 - 08:59 AM