
ஹங்கேரியில் காவல் துறையினரின் தடியடிக்குப் பயந்து ஓடிய அகதிகளை எட்டி உதைத்த பெண் செய்தியாளர் ஒருவருக்கு 3 ஆண்டுகள் நன்னடத்தை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாத தாக்குதல் காரணமாக மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் அகதிகள் ஹங்கேரி வழியாகவே பயணம் செய்கின்றனர். இது போல் நூற்றுக்கணக்கான அகதிகள் கூட்டமாகச் சென்றதைத் தடுக்க 2015ம் ஆண்டு ஹங்கேரி போலீசார் தடியடி நடத்தினார்கள்.
போலீசாருக்குப் பயந்து ஓடிய அகதிகளை, பெண் செய்தியாளர் ஒருவர் காலால் எட்டி உதைத்த காட்சிகள் இணையதளங்களில் வெளியாகி உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. அவர் இனவெறியுடன் நடந்துகொண்டதாகவும் புகார்கள் எழுந்தன.
இதையடுத்து நடந்து வந்த விசாரணையில் பெண் செய்தியாளருக்கு 3 ஆண்டுகள் நன்னடத்தை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இருப்பினும் அவர் இனவெறியுடன் செயல்பட்டதற்கு ஆதாரம் இல்லை என நீதிமன்றம் அறிவித்துள்ளது. தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து சர்ச்சைக்குரிய செய்தியாளரைப் பணி நீக்கம் செய்வதாக செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.