வெள்ளி, 14 ஜனவரி, 2022

உ.பி., தேர்தல்; உன்னாவ் பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்டவரின் தாய் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிப்பு

 உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் 50 பெண்களை உள்ளடக்கிய 125 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை காங்கிரஸ் கட்சி வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களில் உன்னாவ் கற்பழிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரின் தாய் ஆஷா சிங் மற்றும் சோன்பத்ராவில் உள்ள உம்பா கிராமத்தில் நிலம் தொடர்பான கோண்ட் பழங்குடியினரின் சட்டப் போராட்டத்தை முன்னெடுத்த ராம்ராஜ் கோண்ட் ஆகியோர் அடங்குவர்.

ராம்ராஜ் கோண்ட் தற்போது, சோன்பத்ரா மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக உள்ளார்.

மற்ற வேட்பாளர்களில் கடந்த ஆண்டு நவம்பரில் ஷாஜஹான்பூரில் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்திக்க முயன்றபோது காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஆஷா தொழிலாளி பூனம் பாண்டே மற்றும் CAA எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக சிறையில் இருந்த காங்கிரஸ் தலைவர் சதாப் ஜாபர் ஆகியோர் அடங்குவர்.

மொத்தமுள்ள 125 வேட்பாளர்களில் 40 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் 40 சதவீதம் பேர் இளைஞர்கள். “இந்த வரலாற்று முயற்சியின் மூலம், மாநிலத்தில் ஒரு புதிய அரசியலை கொண்டு வருவோம் என்று நம்புகிறோம்,” என்று காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி ஒரு காணொலி வாயிலான செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

உ.பி.யில் பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

13 1 2022 

source https://tamil.indianexpress.com/india/congress-first-list-candidates-up-elections-unnao-rape-case-victim-396934/