செவ்வாய், 25 ஜூலை, 2023

பிரதமர் தொடங்கி வைத்த ஒரே வாரத்தில் மழையால் சேதமுற்ற அந்தமான் விமான நிலையம்!

 24 7 23

பிரதமர் மோடி திறந்து வைத்து ஒரு வாரத்திற்குள்ளாக வீர சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தின் மேற்கூரைப் பகுதிகள் மழை காரணமாக சரிந்துவிழுந்தன.

கடந்த ஜூலை 18-ஆம் தேதி அன்று அந்தமானின் போர்ட் பிளேயரில் வீர் சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டடத்தை பிரதமர் மோடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார். தொடக்கிவைத்து இன்னமும் பயன்பாட்டுக்குக்கூட வராத நிலையில், ஒரு வாரத்துக்குள் வீர சாவர்க்கர் விமான நிலையத்தின் மேற்கூரைப் பகுதிகள் பலத்த காற்று – மழை காரணமாக சரிந்துவிழுந்தன.
சிசிடிவி கேமராக்களைப் பொருத்துவதற்காக டிக்கெட் கவுன்ட்டர், முனையத்தின் வெளிப்பகுதிகளில் மேற்கூரைப் பகுதிகள் தளர்த்தப்பட்டிருந்ததாக அலுவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், இந்த பாதிப்பு விமான நிலையத்துக்கு வெளியேதான். வேண்டுமென்றுதான் இந்தப் பகுதி தளர்த்திவைக்கப்பட்டிருந்தது என மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய எம். சிந்தியா குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த நிகழ்வு தொடர்பாக மத்திய அமைச்சர் சிந்தியாவுக்கு ட்வீட் செய்துள்ள காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், இப்போதெல்லாம் பிரதமர் மோடி, வேலை முடிந்ததோ, முடியவில்லையோ, தரம் குறைந்த கட்டுமானங்களோ என்னவோ, எதை வேண்டுமானாலும் – உடனடியாக திறந்து வைத்து விடுகிறார் என கூறியுள்ளார். தற்போது சரிந்து கிடக்கும் வீர சாவர்க்கர் விமான நிலையப் பகுதிகளின் காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகப் பரவி வருகிறது.

  • பி. ஜேம்ஸ் லிசா


source https://news7tamil.live/andaman-veer-savarkar-airport-damaged-by-rain-within-a-week-of-prime-ministers-inauguration.html