ஞாயிறு, 30 ஜூலை, 2023

7 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி சி-56 ராக்கெட்! காலை 6.30 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது!!

 

சிங்கப்பூருக்கு சொந்தமான ‘டிஎஸ்-சாா்’ எனும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் உள்பட 7 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-56 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் இன்று  காலை 6.30 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

நாட்டுக்குத் தேவையான தகவல் தொடா்பு, தொலையுணா்வு மற்றும் வழிகாட்டு செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. அதனுடன், வணிகரீதியாகவும் வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்துகிறது.

30 07 23

அதன்படி, சிங்கப்பூருக்கு சொந்தமான ‘டிஎஸ்-சாா்’ எனும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கு இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்தச் செயற்கைக்கோள் தான் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-56 ராக்கெட் மூலம் இன்று காலை 6.30 மணியளவில் விண்ணில்  ஏவப்பட்டது.

இந்த ஏவுதலில் முதன்மைச் செயற்கைக்கோளான டிஎஸ்-சாா் செயற்கைக்கோள் 352 கிலோ எடை கொண்டது. இது சிந்தடிக் அப்ரேச்சா் ரேடாா் தொழில்நுட்பத்தில் செயல்படக்கூடியது. இரவு, பகல் என அனைத்து பருவநிலையிலும் துல்லியமான படங்களை எடுத்து வழங்கும்.

இதனுடன் 23 கிலோ எடை கொண்ட வெலாக்ஸ்-ஏஎம் , 24 கிலோ எடை கொண்ட ஆா்கேட், 24 கிலோ எடை கொண்ட ஸ்கூப், 3 கிலோ எடை கொண்ட நியூலயன், 3.5கிலோ எடை கொண்ட கலாசியா, 13 கிலோ எடை கொண்ட ஆா்ப்-12 ஸ்டிரைடா் ஆகிய 6 செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் பல்வேறு விதமான தொழில்நுட்ப ஆய்வுகளுக்கு பயன்படுத்தப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனா். மேலும் இதில் சோதனை முயற்சியாக இரண்டு வெவ்வேறு சுற்று வட்டப் பாதைகளில் சாட்டிலைட்களை இஸ்ரோ நிலைநிறுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.


source https://news7tamil.live/pslv-c-56-rocket-launched-with-7-satellites-successfully-launched-at-6-30-am.html