சனி, 22 ஜூலை, 2023

திருக்குர்ஆன் எரிப்பு எதிரொலி: இஸ்லாமிய நாடுகளில் வெடித்த போராட்டங்கள்!

 

சுவீடன் நாட்டில் திருக்குர்ஆன் அவமதிக்கப்படுவதற்கு அதிகாரிகள் அனுமதித்ததை கண்டித்து ஏராளமான முஸ்லிம் நாடுகளில் அமைதியான முறையில் போராட்டங்கள் நடைபெற்றன

சுவீடன் நாட்டில் அமைதி முறையில் ஆா்ப்பாட்டம் நடத்துவதற்கு அடிப்படை உரிமை அளிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டில் மதநிந்தனைத் தடைச் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், ஆா்ப்பாட்டங்களின் போது எந்த மதத்துக்கு எதிரான செயல்களையும் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், அரசின் அனுமதியுடன் சுவீடனில் நடைபெறும் ஆா்ப்பாட்டங்களின் போது முஸ்லிம்களின் புனித நூலாக கருதப்படும் திருக்குர்ஆன் எரிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் இஸ்லாமிய நாடுகளில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்வீடன் தலைநகா் ஸ்டாக்ஹோமிலுள்ள துருக்கி தூதரகத்துக்கு அருகே நடைபெற்ற இது போன்ற ஆா்ப்பாட்டம் காரணமாக சுவீடனுக்கும், துருக்கிக்கும் இடையிலான நட்புறவில் பதற்றம் ஏற்பட்டது. ஏற்கெனவே, உக்ரைன் போருக்குப் பிறகு அதுவரை அணி சேரா நிலையைக் கடைப்பிடித்து வந்த சுவீடன் நேட்டோ அமைப்பில் இணைய முயன்றாலும், அதற்கு துருக்கி தடைக்கல்லாக இருந்து வருகிறது.

இந்த சூழலில், ஈராக்கிலிருந்து ஸ்வீடனில் தஞ்சமடைந்துள்ள சல்வான் மோமிகா என்ற கிறிஸ்தவரும், மற்றொரு இராக்கியரும் நேற்று முன்தினம் ஆா்ப்பாட்டம் நடத்தப்போவதாக சமூக ஊடங்கத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தனா். அரசின் அனுமதியுடன் ஈராக் தூதரகம் எதிரே நடைபெறவிருக்கும் அந்த ஆா்ப்பாட்டத்தின் போது திருக்குரானை  கொளுத்தப்போவதாகவும் அவா்கள் கூறியிருந்தனா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, ஈராக் தலைநகா் பாக்தாதிலுள்ள சுவீடன் தூதரகம் முன்னா் கடந்த வியாழன் அன்று அதிகாலை குவிந்த நூற்றுக்கணக்கானவா்கள் அந்தத் தூதரகத்தை அடித்து நொறுக்கியதுடன் தீ வைத்து கொளுத்தினா். இதற்கிடையே, திட்டமிட்டபடி சுவீடனிலுள்ள ஈராக் தூதரகம் எதிரே அந்த நாட்டு அதிகாரிகளின் அனுமதியுடன் அன்று ஆா்ப்பாட்டம் நடத்திய மோமிகா, திருக்குர்ஆனை அவமதித்தார்.

ஆனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் இதனை தடுக்கவில்லை. இதனை கண்டிக்கும் வகையில் ஈராக் நாட்டிற்கான சுவீடன் தூதர் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது. அதேபோல் சுவீடனிலுள்ள ஈராக் தூதரும் உடனடியாக திரும்ப அழைக்கப்பட்டார். இந்த நிலைப்பாட்டை சுவீடன் தொடா்ந்து பின்பற்றினால், அந்த நாட்டுடனான தூதரக உறவு முழுமையாகத் துண்டிக்கப்படும் என ஈராக் பிரதமர் அறிவித்தார்.

சுவீடன் நாட்டில் நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு அனுமதி அளித்த அரசை கண்டித்து, ஈராக், ஈரான், லெபனான் உள்ளிட்ட நாடுகளில் நேற்று போராட்டங்கள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகையை முடித்துவிட்டு நூற்றுக்கணக்கானவா்கள் பங்கேற்ற இந்த போராட்டங்கள் அமைதியாக நடைபெற்றதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன.

source https://news7tamil.live/holy-quran-burning-echo-peaceful-protest-in-muslim-countries.html