திங்கள், 24 ஜூலை, 2023

’நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயார் ஆகுங்கள்’ – தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

 

எதிர்வரும் காலம் டிஜிட்டல் காலம் என்பதை உணர்ந்து, தொண்டர்கள் ஒவ்வொருவரும் நடமாடும் ஊடகமாக மாறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், கட்சி தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவது குறித்த தகவலை தொண்டர்களுக்கு தெரிவித்துள்ளார். 

அந்த கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது” கழக உடன்பிறப்புகளின் மனக் குரலை நான் அறிவேன். அது குரலாகவும், சில நேரங்களில் உரிமையுடனான குமுறலாகவும் வெளிப்படுவதையும் உணர்கிறேன்.

திண்ணைப் பிரச்சாரங்கள், தெருமுனைக் கூட்டங்கள் எனப் பேசி பேசி வளர்ந்த இயக்கம் திமுக கழகம். எதிர்வரும் காலம் டிஜிட்டல் காலம் என்பதை உணர்ந்து, தொண்டர்கள் ஒவ்வொருவரும் நடமாடும் ஊடகமாக மாறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. உங்கள் வாக்குச்சாவடிக்குட்பட்ட தெருக்கள் தோறும், திண்ணைகள் தோறும் பரப்புரையை கழகத்தின் சாதனைகளைக் கொண்டு சேர்க்க வேண்டிய மாபெரும் பொறுப்பு உங்களிடம் உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் களம் நம்மை அழைக்கிறது. ஜனநாயகம் காத்திடும் வீரர்களான கழக உடன்பிறப்புகளே ஆயத்தமாவீர். ‘இந்தியா’வின் வெற்றி நம் கையில்” இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, திருச்சியில் வரும் 26ம் தேதி திமுகவின் வாக்குச்சாவடி முகவர்களின் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கக்கூடிய நிலையில், தொண்டர்களுக்கு இந்த கடிதத்தினை எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.


source https://news7tamil.live/chief-minister-m-k-stals-letter-to-the-volunteers-get-ready-for-the-parliamentary-elections.html