ஞாயிறு, 30 ஜூலை, 2023

அமைதி திரும்பிவிட்டால் ஏன் இன்னும் மணிப்பூர் மக்கள் முகாம்களில் உள்ளனர்” – காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய் கேள்வி..!

 

” அமைதி திரும்பிவிட்டால் ஏன் இன்னும் மணிப்பூர் மக்கள் முகாம்களில் உள்ளனர்” என கலவரத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சந்தித்த பின் காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு மாநிலங்களின் ஒன்றான மணிப்பூரில் நாகா, குக்கி மற்றும் மைதேயி இனங்கள் வசித்து வருகின்றன. இவர்களில் நாகா மற்றும் குக்கி இன மக்கள் பழங்குடி பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் மணிப்பூர் உயர்நீதிமன்றம் மைதேயி மக்களுக்கு பழங்குடி பட்டியலில் சேர்ப்பதற்கான பரிந்துரைகள் குறித்து விரிவான அறிக்கையை மத்திய அரசுக்கு நான்கு வாரங்களுக்குள் அனுப்புமாறு  கேட்டுக் கொண்டது.

மைதேயி மக்களை பழங்குடியின பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. மணிப்பூர் மாநில அனைத்து பழங்குடி மாணவர் சங்கம் சார்பில் கடந்த மே 3ம் தேதி பேரணிக்கு ஏற்பாடு செய்தனர். இந்த பேரணியில் நாகா இன மக்களும், குக்கி இன மக்களும் திரளாக பங்கெடுத்துக் கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மைதேயி இன மக்களும் பேரணி நடத்தினர். இந்த பேரணிக்கு பின்பு வெடித்த  மணிப்பூர் முழுவதும் படிப்படியாக வன்முறையாக மாறியது. இதன் பின்னர் மணிப்பூர் முழுவதும் 2மாதமாக இணைய சேவை துண்டிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த மே 4ம்தேதி மணிப்பூரில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை கலவரக்காரர்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் கொடுமை செய்த காணொலி இணையத்தில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர் ஜூலை 20ம் தேதி தொடங்கியது. கூட்டத் தொடர் தொடங்கியதும் மணிப்பூர் வீடியோ தொடர்பாக எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் எனவும் , விதி 267ன் விவாதம் நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

மணிப்பூர் வீடியோ விவாகரம் தொடர்பாக பிரதமர் இதுவரை பதில் அளிக்காத நிலையில் நாடாளுமன்றம் முடங்கியது. எதிர்கட்சியினர் மத்திய அரசின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்தின் மீது சபாநாயகர் விவாதத்திற்கு ஏற்பதாக தெரிவித்தார். மாநிலங்களவையில் விவாதத்திற்கு சபாநாயகர் மறுப்பு தெரிவிக்கவே மாநிலங்களவை முடங்கியது. கடந்த வாரம் முழுக்க இரு அவைகளும் முடங்கின.

எதிர்க்கட்சிகளின் INDIA கூட்டணியை சேர்ந்த 20 எம்பிக்கள் குழு இன்று மணிப்பூர் மாநிலத்திற்கு சென்றுள்ளது.  மணிப்பூர் சென்றுள்ள  எம்பிக்கள் பட்டியலில் தமிழ்நாட்டை சேர்ந்த திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி, விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் மற்றும் அக்கட்சியை சேர்ந்த ரவிக்குமார் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த எம்பி கவுரவ் கோகாய் தலைமையில் சென்ற பிரதிநிதிகள் இன்று கலவரத்தால் மணிப்பூர் மக்களை சந்தித்தனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கவுரவ் கோகாய் தெரிவித்ததாவது..

“ மத்திய அரசு மணிப்பூரில் அமைதி திரும்பிவிட்டதாக சொல்கிறது; ஆனால் மணிப்பூர் மக்கள் இன்னும் ஏன் நிவாரண முகாம்களில் தங்கவைப்பக்கட்டுள்ளனர். ஏன் அவர்களால் இன்னும் வீடு திரும்ப முடியவில்லை. அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடி மணிப்பூர் செல்ல விரும்பினால் நாங்களும் அவருடன் செல்ல தயார் ” என கவுரவ் கோகாய் தெரிவித்தார்.

 


source https://news7tamil.live/if-peace-has-returned-why-are-the-people-of-manipur-still-in-the-camps-congress-mp-gaurav-gogai-asked.html