வியாழன், 27 ஜூலை, 2023

அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் ஏற்பு: சபாநாயகர் கையில் விவாத தேதி – நேரம்

 26 7 23

ஆளும் பா.ஜ.க அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் மக்களவையில் கொண்டுவர முடிவு செய்தன. அதன்படி காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகாய் மற்றும் பாரதிய ராஷ்டீரிய சமிதி எம்.பி. நாம நாகேஸ்வர ராவ் ஆகியோர் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கான நோட்டீஸை இன்று காலை வழங்கினர்.

இன்று காலை மக்களவை தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், அவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின் 12 மணிக்கு அவை கூடியதும், நம்பிக்கை இல்லா தீர்மானம் ஏற்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். அனைத்துக் கட்சி தலைவர்களிடம் ஆலோசித்து விவாதத்திற்கான தேதி அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் எந்த ஒரு எம்.பி.யும் 198-வது பிரிவின் கீழ் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர முடியும். ஆனால் அந்த தீர்மானத்துக்கு குறைந்த பட்சம் 50 எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்து கையெழுத்து போட்டிருக்க வேண்டும். மேலும் மக்களவை தொடங்குவதற்கு முன்பு காலை 10 மணிக்குள் அந்த தீர்மானத்தை சபாநாயகரிடம் கொடுக்க வேண்டும். அதை சபாநாயகர் ஆய்வு செய்வார். அதில் கையெழுத்து போட்டுள்ள 50 எம்.பி.க்கள் பற்றி கணக்கிடுவார். அதன் பிறகுதான் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்துக்கு தேதியை அறிவிப்பார்.

இந்த நடைமுறைகளை எடுத்து வைப்பதற்காக எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இன்று காலை பாராளுமன்ற வளாகத்தில் கூடி ஆலோசனை நடத்தினார்கள். அப்போது நம்பிக்கையில்லா தீர்மானம் ஆவணத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டது. அதன்பிறகு முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் தனியாக ஆலோசனை நடத்தினார்கள்.

இதையடுத்து நாடாளுமன்ற காங்கிரஸ் துணை தலைவரும், அசாம் மாநில எம்.பி.யுமான கவுரவ் கோகாய் மக்களவை அலுவலகத்துக்கு சென்றார். அங்கு அவர் மக்களவை செயலாளரிடம் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான கடிதங்களை ஒப்படைத்தார்.

மணிப்பூர் குறித்து பிரதமர் மோடியை நாடாளுமன்றத்தில் பேச வைப்பதற்காக காங்கிரஸ் சார்பில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை விசாரணைக்கு ஏற்றார் சபாநாயகர் ஓம் பிர்லா. நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் மக்களவையில் அதன் மீது விவாதம் நடைபெற உள்ளது. மக்களவைத் தலைவர்களுடன் விவாதித்து, தீர்மானம் எடுப்பதற்கான தேதி மற்றும் நேரத்தை ஒதுக்குவதாகவும் கூறினார்.

நாடாளுமன்ற விதிகளின்படி, நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்ட 6 மாதங்களுக்குப் பிறகுதான் அதை மீண்டும் கொண்டு வர முடியும். முன்னதாக, 16வது லோக்சபாவின் மழைக்கால கூட்டத்தொடரில், எதிர்க்கட்சிகள் மீண்டும் முயற்சித்தன. ஆனால், ஆளும் பாஜக அரசு மக்களவையில் தீர்மானத்தை 199 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இருப்பினும், 12 மணிநேர விவாதத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்தின் விவசாயம் மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் கும்பல் படுகொலை சம்பவங்கள் குறித்து நீண்ட நேரம் பேசினர்.

லோக்சபாவில் பா.ஜ.க.வுக்கு அமோக பெரும்பான்மை இருப்பதால், மோடி அரசை தோற்கடிக்க முடியாது என்பதை எதிர்க்கட்சிகள் அறிந்திருப்பதால், இந்த முறை அதேபோன்ற விவாதத்தை மட்டுமே எதிர்பார்க்கின்றனர்.


source https://tamil.indianexpress.com/india/congresss-no-trust-motion-against-modi-govt-accepted-speaker-to-decide-date-and-time-for-discussion-in-tamil-729440/