சனி, 21 அக்டோபர், 2023

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே தொடரும் போர் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்ததாக தகவல்!

 

இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களால் காஸா நகரம் உருக்குலைந்துள்ளது. ஹமாஸ் அமைப்பினரும் இஸ்ரேல் மீது சரமாரியாக ராக்கெட் குண்டுகளை வீசியும்,  இஸ்ரேல் நகரங்களுக்குள் ஊடுருவியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இரு தரப்புக்கு இடையேயான போர் 15-வது நாளை எட்டியுள்ளது.

காஸா மீது தரை வழித் தாக்குதலை மேற்கொள்ளும் வகையில், எல்லையில் பீரங்கிகள் மற்றும் ராணுவ வீரர்களை இஸ்ரேல் குவித்து வருகிறது. காஸாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுகளை வீசின. இதில் தெற்கு காஸா பகுதியில் உள்ள ரபா, கான், யூனிஸ் நகரங்களில் உள்ள குடியிருப்பு கட்டடங்கள் தரைமட்டமாகின. இடிபாடுகளில் சிக்கி ஏராளமானோர் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.காசா பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள இஸ்ரேல், போரை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த போரினால் இருதரப்பிலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏராளமான பொதுமக்களை ஹமாஸ் அமைப்பினர் பிணையக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

source https://news7tamil.live/the-war-between-israel-and-hamas-continues-the-death-toll-has-exceeded-5-thousand.html