வெள்ளி, 20 அக்டோபர், 2023

என்.சங்கரய்யாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும் – அமைச்சர் பொன்முடி வலியுறுத்தல்

 News7 Tamil Google News Link

சுதந்திர போராட்ட தியாகி என்.சங்கரய்யாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் தர வேண்டும் என அமைச்சர் பொன்முடி வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது : ஜூலை 15, 1922-ம் ஆண்டு பிறந்த மிகச் சிறந்த சுதந்திரப் போராட்டத் தியாகியும், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளை சிறையில் கழித்தவரும், நூறு வயதைக் கடந்தவரும், ஏழை எளிய மக்களுக்காக தம் வாழ்நாளை அர்ப்பணித்தவரும், தமிழினத்தின் வளர்ச்சிக்காக உழைத்தவரும், மாணவத் தலைவரும், சிறந்த சட்டமன்ற உறுப்பினருமான என்.சங்கரய்யா, நம் தமிழ் சமூகத்திற்கு ஆற்றியுள்ள ஒப்புயர்வற்ற சேவையை அங்கீகரிக்கும் விதமாக கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி நடைபெற்ற மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆட்சிக் குழு (Syndicate) கூட்டத்தில் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் (D.Litt) வழங்கப்படும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் செப்டம்பர் 20-ம் தேதி நடைபெற்ற மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆட்சிப் பேரவைக் (Senate) கூட்டத்தில் எதிர்வரும் பட்டமளிப்பு விழாவில் சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் (D.Litt) வழங்கப்படும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேற்படி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் அதிகாரம் மதுரை காமராசர் பல்கலைக்கழகச் சட்டம், 1965, அத்தியாயம் XX, தொகுதி I ல் ஆட்சிப் பேரவைக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் அவ்வத்தியாயத்தில் கௌரவ முனைவர் பட்டயம்  அல்லது சான்றிதழில் பல்கலைக்கழக வேந்தர் கையொப்பமிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஆட்சிக்குழு மற்றும் ஆட்சிப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் (D.Litt) வழங்க அனுமதி கோரும் கோப்பு பல்கலைக்கழகத்தால் ஆளுநருக்கு சமர்ப்பிக்கப்பட்ட போது, அவர் அதில் கையொப்பமிட மறுத்துள்ளார்.

இந்நிலையில் நவம்பர் 02-ம் தேதி மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில், பல்கலைக்கழக ஆட்சிக்குழு (Syndicate) மற்றும் ஆட்சிப் பேரவையில் (Senate) நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் (D.Litt) வழங்குமாறு ஆளுநர் ஆர்.என்.ரவி கொள்ளப்படுகிறார்”. இவ்வாறு அமைச்சர் பொன்முடி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.


source https://news7tamil.live/the-governor-should-give-his-approval-to-confer-an-honorary-doctorate-on-sankarayya-minister-ponmudi-insists.html