ஞாயிறு, 15 அக்டோபர், 2023

குடியரசுத் தலைவரை வெளியே உட்கார வைத்து செங்கோலை உள்ளே வைத்தது அரசு!”- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஆனி ராஜா பேச்சு

 

நாட்டின் குடியரசுத் தலைவராக ஒரு பழங்குடியினர் இருக்கும்போது, அவரை நாடாளுமன்றத்திற்கு வெளியே உட்கார வைத்து, செங்கோலை உள்ளே வைத்த அரசு தான் பாஜக என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாக குழு உறுப்பினர் ஆனி ராஜா கூறியுள்ளார்.

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டையொட்டி திமுக மகளிரணி சார்பில் சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மகளிர் உரிமை மாநாடு நடைபெற்றது.  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் காங். முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங். பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி, கார் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் லெஷி சிங் – பீ, டெல்லி துணை சபாநாயகர் ராக்கி பிட்லன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொலிட் பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி, திரிணாமுல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுஷ்மிதா தேவ், தேசியவாத காங். கட்சி செயல் தலைவர் சுப்ரியா சுலே, கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் ஆனி ராஜா, சமாஜ்வாடி எம்.பி டிம்பிள் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாக குழு உறுப்பினர் ஆனி ராஜா பேசியதாவது:

மத்திய அரசு பெண்களின் உரிமையை பாதிக்கும் வகையில் விச பாம்பு போல செயல்படுகிறது. மதச்சார்பற்ற இந்திய பாராளுமன்றத்தில் ஜெய் ஸ்ரீ ராம் மாத்திரம் கேட்கிறது. ஒரு பழங்குடியினர் குடியரசுத் தலைவர் இந்தியாவில் இருக்கும்போது அவரை நாடாளுமன்றத்திற்கு வெளியே உட்கார வைத்து செங்கோலை உள்ளே வைத்த அரசு தான் மத்திய அரசு.

பாலியல் வன்கொடுமை செய்தி 2 நாட்களுக்கு மட்டுமே ஊடகங்களில் பேசுபொருளாக உள்ளது. அதற்கு பிறகு மறந்து போகிறது. இந்த நிலையில் தான் மகளிர் உரிமை மாநாடு இங்கு நடைபெறுகிறது. எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் நிலைமைதான் இந்தியாவில் உள்ளது.

2014 ஆம் ஆண்டு ஒன்றிய பாஜக ஆட்சி வந்ததில் இருந்து பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு மீது நடவடிக்கை எடுத்து நீதிமன்றத்திற்கு சென்றால் அவர்களுக்கு தண்டனை கிடைப்பதில்லை. இந்தியாவில் நிறைய சட்டங்கள் உள்ளது, பெண்களின் உரிமைக்காக. இந்தியாவில் பெண்கள் போராடி அவர்களின் ரத்தத்தின் மீது தான் நிறைய சட்டங்கள் இயற்றப்பட்டது.

பிராமணர்களை ஜெயிலில் வைத்தால் கொடும் பாவம் என்று சொல்லி பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்துவிட்டார்கள். பெண்களை ஏமாற்றி தான் தற்போது பாஜக ஆட்சியில் உள்ளது. தற்போது நாடாளுமன்ற தேர்தலுக்காக பெண்களுக்கு இட ஒதுக்கீட்டு சட்டத்தை இயற்றி இருக்கிறார்கள். பேப்பரில் சர்க்கரை என்று எழுதி அருகில் தீயை வைத்து குடித்தால் இனிக்குமா ? அதேபோல் தான் மகளிர் இட ஒதுக்கீடும்.

பெண்கள் ஏமாற்றி ஆட்சியில் அமர்ந்து இருக்கும் பாஜக ஆட்சியை ஒழித்து கட்ட வேண்டும். அனைத்து உரிமைகளையும் காப்பாற்றவும் இந்தியாவை காப்பாற்றவும் நம்மளை நாமே காப்பாற்றவும் மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவில் இந்த மாநாடு அமைய வேண்டும்.

இவ்வாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாக குழு உறுப்பினர் ஆனி ராஜா பேசினார்.


source https://news7tamil.live/the-bjp-government-kept-the-scepter-inside-while-keeping-the-president-of-the-republic-sitting-outside-ani-raja-from-communist-party-of-india-speech.html