கல்லூரி விடுதி குளியலறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட கேரள கால்நடை மருத்துவ மாணவர், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு சீனியர் மற்றும் சக மாணவர்களால் சுமார் 29 மணிநேரம்"தொடர்ச்சியாக" தாக்கப்பட்டதாக கேரள போலீஸார், மத்திய புலனாய்வுப் பிரிவினரிடம் (சிபிஐ) கூறியதாக அறியப்படுகிறது.
ஜே எஸ் சித்தார்த்தன், 20, கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
அவரது மரணம் தொடர்பாக 20 பேர் மீது, குற்றவியல் சதி மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் கேரளா ராகிங் தடைச் சட்டத்தின் விதிகளின் கீழ் சிபிஐ வெள்ளிக்கிழமை எஃப்ஐஆர் பதிவு செய்தது.
ஒரு வழக்கு ஆவணத்தில், வைத்திரி காவல் நிலையத்தின் சப்-இன்ஸ்பெக்டர் பிரஷோப் பி.வி, சீனியர்கள் மற்றும் சக வகுப்பு மாணவர்கள் சித்தார்த்தனை "உடல் மற்றும் மனரீதியாக சித்திரவதை செய்து" உயிரை மாய்த்துக்கொள்ள தூண்டியதாக எழுதினார்.
‘பிப்ரவரி 16 ஆம் தேதி காலை 9 மணி முதல் பிப்ரவரி 17 ஆம் தேதி மதியம் 2 மணி வரை, சித்தார்த்தனை கைகளாலும் பெல்ட்டாலும் தொடர்ந்து தாக்கி கொடூரமான ராகிங்கிற்கு உட்படுத்தினார்கள். இது அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.
தன்னால் இன்ஸ்டிடியூட்டில் படிப்பைத் தொடரவோ, இந்தப் படிப்பை முடிக்கவோ அல்லது படிப்பை விட்டுவிட்டு வீட்டுக்குச் செல்லவோ முடியாது, என்ற உணர்வை ஏற்படுத்தியது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என எண்ணி, பிப்ரவரி 18ம் தேதி மதியம் 12.30 மணி முதல் 13.45 மணிக்குள், ஆண்கள் விடுதியின் குளியலறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போலிசார் முதலில் இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்குப் பதிவு செய்தனர்.
ஆனால் இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், கல்லூரியின் ராகிங் தடுப்புப் பிரிவினர் அளித்த அறிக்கை, கல்லூரி டீன் வாக்குமூலம், பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவ அதிகாரியின் வாக்குமூலம், மற்ற சாட்சிகள் அளித்த வாக்குமூலத்தில் இருந்து சித்தார்த்தன் சில மூத்த மாணவர்கள் மற்றும் வகுப்பு தோழர்களால் ‘உடல் மற்றும் மனரீதியாக சித்திரவதை செய்யப்பட்டார்’ என்று, அந்த அறிக்கையில் கூறப்ப்பட்டுள்ளது.
மேலும் சிபிஐ தனது எப்ஐஆரில், ’சித்தார்த்தன் மரணம் தொடர்பான விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. மற்றொரு இரண்டாம் ஆண்டு மாணவரான கிரிஷன்லாலின் வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 174வது பிரிவின் கீழ் முதலில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.
இருப்பினும், புதிய பிரிவுகளை சேர்க்க எஸ்ஐ பிரஷோப் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த விசாரணையை கேரள போலீசாரிடம் இருந்து சிபிஐ எடுத்தது.
மேலும் 120 (குற்றச் சதி), 306 (தற்கொலைக்குத் தூண்டுதல்), 323 (காயத்தை ஏற்படுத்துதல்), 342 (சட்டவிரோதமாக அடைத்து வைத்தல்), 506 (அச்சுறுத்தல்), 355 (தாக்குதல்), கேரள ராகிங் தடைச் சட்டத்தின் பிரிவு 4, 3 ஐபிசி பிரிவுகளின் கீழ் புதிய எஃப்ஐஆர் பதிவு செய்தது.
நான்கு இந்திய மாணவர் கூட்டமைப்பு (SFI) தலைவர்கள் – யுனியன் தலைவர் அருண் கே, SFI பிரிவு செயலாளர் அமல் இஹ்சன், மற்றும் யூனிட் உறுப்பினர்கள் ஆசிப் கான் மற்றும் அபிஷேக் எஸ் - தவிர அகில் கே, காசிநாதன் ஆர் எஸ், அமீன் அக்பரலி, அருண் கே, சின்ஜோ ஜான்சன், அஜய் ஜே, அல்தாஃப் ஏ, சவுத் ரிசல் இ கே, ஆதித்யன், முகமது தனிஷ், ரெஹான் பினோய், ஆகாஷ் எஸ் டி, ஸ்ரீஹரி ஆர் டி, டான்ஸ் டாய், பில்கேட் ஜோஷ்வா தண்ணிக்கோடு, நசீர் வி மற்றும் அபி வி. உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் பெயர்களை சிபிஐ குறிப்பிட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/india/kerala-student-found-hanging-was-tortured-continuously-for-29-hours-police-report-4471546