வெள்ளி, 27 செப்டம்பர், 2024

டெல்லியில் ஸ்டாலின்: செந்தில் பாலாஜி வக்கீல்களை அழைத்து பாராட்டு

 

டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று பிரதமர் மோடியை சந்தித்து தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவிக்க வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அடுத்து செந்தில்பாலாஜி வக்கீல்களை அழைத்து பாராட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று மாலை சென்னையில் இருந்து புறப்பட்டு டெல்லி சென்றார். டெல்லி விமான நிலையத்தில் திமுக எம்.பிக்கள. அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு இல்லத்திற்கு சென்ற மு.க.ஸ்டாலின் வளாகத்தில் வைக்கப்பட்டிருக்கும் கலைஞர் கருணாநிதி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

இதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 27) பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்.

காலை 11 மணியளவில் நடைபெறும் இந்த சந்திப்பில், மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்ட பணிகளுக்கான நிதியை ஒதுக்கவும், சமக்ரா சிக்ஷா அபியான் என்ற ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டுக்கு வழங்கவேண்யடி நிலுவைத்தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய வரி நிலுவைத் தொகைகள், கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கான நிவாரண நிதியை வழங்கவும் கோரிக்கை வைக்க உள்ளார்.

இந்த சந்திப்பின்போது, தமிழ்நாட்டுக்கான பல்வேறு கோரிக்கைள் அடங்கிய மனுக்களையும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் கொடுக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோரை சந்திக்கும் முதல்வர் ஸ்டாலின், இன்று இரவு சென்னை திரும்புகிறார். 

இதனிடையே சட்டவிரோத பணப்பரமாற்றம், பண மோசடி தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிறையில் இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, நேற்று (செப்டம்பர் 26) ஜாமின் கிடைத்து சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். இவர் வெளியில் வருவதற்கு காரணமாக இருந்த வழக்கறிஞர்களை முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-cm-mk-stalin-meet-pm-modi-today-tin-delhi-7097308