ஞாயிறு, 29 செப்டம்பர், 2024

கேப் கிடைத்தால்…. பெரும்பான்மை இல்லாத அரசு , எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்

 

28 09 2024

stalin dmk vizha

ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கலாசாரம் என ஒரே பாட்டை பாடி கொண்டிருக்கிறார்கள். இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு விரோதமானது என்று தி.மு.க பவள விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார்.

தி.மு.க.,வின் 75வது ஆண்டு பவளவிழா பொதுக்கூட்டம் காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. தி.மு.க தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் பங்கேற்றுள்ள, இந்த கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட தி.மு.க கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றி வருகின்றனர்.

இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றியதாவது: ”1949 இல் ராபின்சன் பூங்காவில் அண்ணா தன் தம்பிமார்களுடன் தி.மு.க.,வை தொடங்கிய போது வான்மழை வாழ்த்தாக பொழிந்தது. இப்போது வையகமே வாழ்த்தும் வகையில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறோம். தி.மு.க அமைத்திருப்பது கொள்கைக் கூட்டணி. இந்த கூட்டணி தொடர்ச்சியாக தேர்தலில் வெற்றி பெற்று வருகிறது. நம்முடைய கூட்டணியை பார்த்து கொள்கை எதிரிகளுக்கு பொறாமை. 

தமிழகத்தில் நாம் அமைத்த கூட்டணியைப் பார்த்துதான் அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணியை அமைத்தார்கள். தி.மு.க.,வின் வெற்றியில் தோழமைக் கட்சிகளுக்கும் பங்கு இருக்கிறது. 75 ஆண்டுகளைக் கொண்டாடும் தி.மு.க நூற்றாண்டை எட்டுவதற்குள் மாநில சுயாட்சியை வென்றெடுக்க வேண்டும். அதற்கு தோழமை கட்சிகளும் எங்களுடன் இணைந்து பயணிக்க வேண்டும். தி.மு.க செய்த சாதனைகளுக்கு உறுதுணையாக தோழமை கட்சிகளும் நின்றிருக்கிறது. கூட்டணிக்குள் மோதல் வராதா புகைச்சல் வராதா என்கிற எண்ணத்தில் பொய்களை பரப்பி அற்பத்தனமான வேலைகளை செய்து வருகிறார்கள். அவர்களின் கனவு ஒரு போதும் பலிக்காது. 

தி.மு.க.,வின் அடிப்படை கொள்கைகள் சமுதாயத்தின் அடிப்படை கொள்கைகளாக உள்ளது. இது சமுதாயத்தை சீர்த்திருத்தும். பொருளாதாரம் தத்துவம், சமத்துவம், ஜனநாயகத்தை உருவாக்க தான் தி.மு.க தோன்றியது. இதை நிறைவேற்ற தான் கட்சியும், ஆட்சியும் தான் இருக்கிறது. இந்த 3 கொள்கைகளை நிறைவேற்ற அதிகாரம் கொண்ட மாநில அரசு தேவை. இதனால் தான் அண்ணா மாநில சுயாட்சி கொள்கைகைள குரல் கொடுத்தார். கோட்டையில் முதல்வர்கள் கொடியேற்றும் உரிமையை கருணாநிதி பெற்று கொடுத்தார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மாநில சுயாட்சிக்காக பேசி வருகிறோம்.

ஆனால் இப்போதைய மத்திய அரசு மாநிலங்களை, யூனியன் பிரதேசமாக மாற்ற முயற்சிக்கிறது. மாநிலங்களை ஒடுக்கி ஒற்றை ஆட்சி தன்மையை கொண்டு வர ‛ஒரே நாடு ஒரே தேர்தல்' முறையை கொண்டு வர பா.ஜ.க முயற்சிக்கிறது. ‛ஒரே நாடு ஒரே தேர்தல்' சாத்தியமானதா? என்று கேட்டால் 1967 ம் ஆண்டு வரை நாடாளுமன்றம், சட்டமன்றத்துக்கு ஒன்றாக தானே தேர்தல் நடந்தது என்று கூறுகிறார்கள். 

அப்போதைய இந்தியாவும், இன்றைய இந்தியாவும் ஒன்றா? அன்றைய வாக்காளர்கள் எவ்வளவு? இன்றயை வாக்காளர்கள் எவ்வளவு?. நம் நாட்டில் 28 மாநிலம், 8 யூனியன் பிரதேசங்கள் உள்ளது. மொத்தம் 4 ஆயிரத்துக்கும் அதிகமான சட்டமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டும். 1951 மக்களவை தேர்தலில் மொத்த வேட்பாளர் 1874, ஆனால் 2024 நாடாளுமன்ற தேர்தலில் 8,360 பேர் போட்டியிட்டனர். 

நாம் எழுப்பும் பல்வேறு கேள்விகளில் முக்கியமானது இதுதான். நாடாளுமன்றத்துக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்த முடிந்ததா? 7 கட்டங்களாக தான் தேர்தலை நடத்த முடிந்தது. இது எப்படி இருக்கிறது என்றால் ‛கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவர்கள் வானத்தில் ஏறி வைகுண்டத்தை காட்ட சொல்வார்களாம்' அதுபோல் இருக்கிறது. இப்போது காஷ்மீரில் தேர்தல் நடக்கிறது. 90 சட்டமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்ய 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இப்படியான சூழலில் நாடாளுமன்றம், சட்டமன்றத்துக்கு ‛ஒரே நாடு ஒரே தேர்தல்' என சொல்வதில் வெட்கமில்லையா? 

ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கலாசாரம் என ஒரே பாட்டை பாடி கொண்டிருக்கிறார்கள். இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு விரோதமானது. இதனால் என்ன நடக்கும். மாநில அரசுகளின் பதவிக்காலம் குறையும். மாநிலங்களில் குழப்பம் ஏற்படும். முன்கூட்டியே ஆட்சிகள் கலைக்கப்படும்.

இப்போது இருக்கிறது என்ன பெரும்பான்மை பலம் கொண்ட பா.ஜ.க அரசா.. பெரும்பான்மை இல்லாத அரசாக பா.ஜ.க உள்ளது. எனவே பா.ஜ.க எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். கொஞ்சம் கேப் விட்டால் நாங்கள் புகுந்துவிடுவோம். மனதில் வைத்துக்கொள்ளுங்கள்,” இவ்வாறு ஸ்டாலின் உரையாற்றினார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-cm-mk-stalin-warns-bjp-for-minority-at-dmk-pavala-vizha-7145706