/indian-express-tamil/media/media_files/2025/11/10/chennai-petrol-bomb-2025-11-10-22-01-04.jpg)
மாநகராட்சி கவுன்சிலர் அலுவலகத்தில் வெடிகுண்டு வீச்சு; சென்னையில் பரபரப்பு
சென்னை கண்ணகி நகரில் உள்ள மாநகராட்சி பெண் கவுன்சிலரின் அலுவலகம் மீது மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசித் தாக்கிய சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கண்ணகி நகர் 8வது குறுக்குத் தெருவில், சென்னை மாநகராட்சியின் 196வது வார்டு அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலக வளாகத்திலேயே இ-சேவை மையம் மற்றும் இந்த வார்டின் அதிமுக கவுன்சிலரான அஸ்வினி கருணா அவர்களின் அலுவலகமும் செயல்பட்டு வருகின்றன. இன்று மாலை (நவ. 10) இந்த அலுவலகம் மீது மர்ம நபர்களால் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது.
இன்று மாலை, டூவீலரில் வந்த இருவர், அலுவலகத்தில் கவுன்சிலர் அஸ்வினி கருணா உள்ளாரா என்று கேட்டுள்ளனர். பின்னர், அவர்கள் தாங்கள் கொண்டு வந்த நாட்டு வெடிகுண்டுகளை அலுவலகத்தின் மீது வீசிவிட்டு அங்கிருந்து தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. இதேவேளை, இன்று மாலை கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த முனியா (50) என்பவரின் இறுதி ஊர்வலம் நடைபெற்றுள்ளது. அந்த ஊர்வலம் மாநகராட்சி அலுவலகம் வழியாகச் சென்றபோது, ஊர்வலத்தில் கலந்து கொண்ட நபர்கள் சிலர் அலுவலகத்தின் மீது நாட்டு வெடியை வீசி வெடிக்கச் செய்ததாகவும் மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நாட்டு வெடிகுண்டு தாக்குதலில், அலுவலகத்தின் முன்பக்கம் இருந்த டியூப் லைட், மாநகராட்சியின் பெயர்ப் பலகை மற்றும் அலுவலகத்தில் மாட்டியிருந்த தலைவர்களின் புகைப்படங்கள் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன. பலத்த சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்ததால், அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர்களும், இ-சேவை மையத்திற்கு வந்த பொதுமக்களும் பயத்தில் அலறியடித்துக் கொண்டு சிதறி ஓடினர்.
காவல்துறை தீவிர விசாரணை தலைநகரில், பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்த கண்ணகி நகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். நாட்டு வெடியை வீசிய மர்ம நபர்கள் யார், அவர்கள் கவுன்சிலரை குறிவைத்து தாக்க வந்தவர்களா அல்லது இறுதி ஊர்வலத்தில் வந்தவர்களா, இதன் பின்னணி என்ன என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரித்து, தப்பியோடிய நபர்களைப் பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/breaking-country-bomb-hurled-at-chennai-corporation-councillors-office-in-kannagi-nagar-10645512





