வெள்ளி, 30 அக்டோபர், 2015

நான் மாட்டிறைச்சி சாப்பிடுவேன், என்னை யாரும் தடுக்க முடியாது: கர்நாடக முதல்வர்


பெங்களூர்: நான் இதுவரை மாட்டிறைச்சி சாப்பிட்டது இல்லை. தற்போது சாப்பிடுவேன். என்னை யாரும் தடுக்க முடியாது என்று பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தாக்கி பேசியுள்ளார் கர்நாடக முதல்வர் சித்தராமையா.
மாட்டிறைச்சி தொடர்பான சர்ச்சைகளும், மாட்டிறைச்சிக்கான தடை குறித்தும் நாடெங்கும் விவாதம் நடந்து வருகிறது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா மாட்டிறைச்சி பற்றி பேசியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
நான் இதுவரை மாட்டிறைச்சி சாப்பிட்டது இல்லை. ஆனால் தற்போது சாப்பிடுவேன். அது என் உரிமை. என்னை யார் தடுக்க முடியும். நீங்கள் யார் என்னை கேள்வி கேட்க(பாஜக, ஆர்.எஸ்.எஸ்.)
அவர்கள் தனிமனித உரிமையை பறிக்க முடியாது. தாத்ரியில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டது காட்டுமிராண்டித்தனமானது. நாட்டில் சகிப்புத்தன்மை இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. இது கண்டனத்திற்குரியது.
பஜ்ரங் தளம், ஸ்ரீராமசேனா, விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்டவை பாஜக ஆட்சியில் தங்களின் சகிப்புத்தன்மையின்மையை காட்டுகின்றன என்றார்.