புதன், 31 மே, 2017

ஐ.ஐ.டி. மாணவர் தாக்கப்பட்ட சம்பவத்தில் 7 மாணவர்கள் கைது! May 31, 2017

ஐ.ஐ.டி. மாணவர் தாக்கப்பட்ட சம்பவத்தில் 7 மாணவர்கள் கைது!


சென்னை ஐஐடி மாணவர் சூரஜ் தாக்கப்பட்டதைக் கண்டித்து, கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த மாணவர்கள் ஐஐடி வளாகம் முன்பு மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டனர், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

சென்னை ஐஐடியில் மாட்டுக்கறி உண்ணும் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இடதுசாரி அமைப்பு உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள், இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்நிலையில், மாட்டுக்கறி விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர் சூரஜை, சென்னை ஐஐடி-யில் பயிலும் மற்றொரு பிரிவினர் தாக்கியுள்ளனர். வலதுசாரி மாணவர் அமைப்பைச் சேர்ந்த மாணவர்களே சூரஜை, தாக்கியதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

தாக்கப்பட்ட மாணவர் சூரஜின் கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டதை அடுத்து,  நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, சூரஜ் தாக்கப்பட்டதைக் கண்டித்து, சென்னை ஐஐடி அருகே, கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மாணவர் அமைப்பு சார்பில் மாட்டிறைச்சி உண்ணும் போராட்டம் நடத்தப்பட்டது. மத்திய அரசுக்கு எதிராக மாணவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

அனுமதி இன்றி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, சம்பந்தப்பட்ட மாணவர்களை போலீசார் கைது செய்தனர். இதனிடையே, சூரஜ் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 7 மாணவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் கோட்டூர்புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.