புதன், 31 மே, 2017

பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு தங்க நாணயங்கள் பரிசாக வழங்கும் அரசு உதவி பெறும் பள்ளி! May 31, 2017

தங்கள் பள்ளியில் சேர்த்தால் அட்டகாசமான பரிசுகள் வழங்கப்படும் என ஒரு பள்ளியின் விளம்பரம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. 

நெல்லை மாவட்டம் தென்காசியில் இருந்து குற்றாலம் செல்லும் வழியில் ஆனந்தா என்ற அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி கடந்த சில நாட்களுக்கு முன்பு விளம்பர பலகை ஒன்றை வைத்தது. இந்த பலகையின் புகைப்படம் சமூக வலைதளகளில் வைரலாக பரவி வருகிறது. 

ஏனென்றால் அந்த விளம்பர பலகையில் அறிவிக்கப்பட்ட பரிசுகள் தான் காரணம். பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை சேரும் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு கிராம் தங்க நாணயம் அல்லது மிக்சி, கிரைண்டர், மின்விசிறி இவற்றில் ஏதேனும் ஒன்று வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல ஆண்டுக்கு 1000 ரூபாய் வீதம் மாணவர்களுக்கு ரொக்கப் பரிசும் உண்டு என்றும் தெரிவிக்கப்பட்டது. ஒரே வீட்டில் 2 மாணவர்களைச் சேர்த்தால் அவர்களுக்கு பீரோ வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது.

இதனை நெட்டிசகன்கள் கிண்டலாக பார்த்த நிலையில் உண்மையிலேயே தமிழ்வழிக் கல்வியை ஊக்குவிக்கவே இந்த பரிசுகள் வழங்க அந்த பள்ளி முயற்சி செய்தது. மேலும் தனியார் பள்ளியில் மாணவர்களை சேர்க்கும் பெற்றோர்களின் மனப்போக்கை மாற்றவே இந்த வித்தியாச முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.