திங்கள், 29 மே, 2017

மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் May 29, 2017




மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை கண்டிக்கும் விதமாக, சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில், மாட்டுக்கறி சாப்பிடும் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டனர். 

நேற்று மாலை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சுமார் 80 மாணவர்கள் வரை பங்கேற்று, மாட்டிறைச்சிக்கு எதிரான தடை உத்தரவுக்கு தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர். என்ன உணவை சாப்பிட வேண்டும் என்பதை தீர்மானிப்பது ஜனநாயக உரிமை என்றும், இதில் மத்திய அரசு தலையிடுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் தெரிவித்தனர். 

இதனிடையே, இறைச்சிக்கு மாடுகளை விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்ததைக் கண்டித்து கோவை பாஜக அலுவலகத்தைக் ஆதிதமிழர் கட்சியினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டம் சிறுபான்மையின மக்கள், ஏழை விவசாயிகள் போன்றோரின் உரிமைகளைப் பறிக்கும் செயலாக உள்ளது என குற்றம் சாட்டிய ஆதிதமிழர் கட்சியினர், பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரைக் காவல் துறையினர்  கைது செய்தனர். 

Beef

இதேபோல், இறைச்சிக்காக மாடுகளை விற்பனை விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளதைக் கண்டித்து, திருச்சியில் மாட்டுக்கறி விநியோகிக்கும் போராட்டம் நடைபெற்றது. திருச்சி பாலக்கரை ரவுண்டாவில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது, பொதுமக்களுக்கு அவர்கள் மாட்டுக்கறியை விநியோகிக்க முயன்றனர்.

இதை போலீசார் தடுத்ததால், அவர்கள் மாட்டிறைச்சியை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மாட்டிறைச்சி தடை சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, பிரதமர் மோடியின் உருவபொம்மையையும், பிஜேபி கொடியையும் எரிக்க முயன்றனர்,. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.