திங்கள், 29 மே, 2017

மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது May 29, 2017




சென்னை மெரினாவில் தடையை மீறி நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தியதாக கைது செய்யப்பட்ட, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் மீது, குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சென்னை மெரினாவில் கடந்த 21ஆம் தேதி முள்ளிவாய்க்க்கால் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தை மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி முன்னின்று நடத்தினார். போலீஸார் தடை விதித்திருந்த நிலையில், தடையை மீறி நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தியதாகக் கூறி, திருமுருகன் காந்தி, டைசன், அருண்குமார், இளமாறன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். 

தற்போது அவர்கள் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் மீதும் குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

‘குண்டர் சட்டம்’ தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!

தொடர் குற்றங்களில் ஈடுபடக்கூடியவர்கள், வனக்குற்றங்களில் ஈடுபடக்கூடியவர்கள், கள்ளச்சாராயம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபடும் சமூக விரோதிகளை கைது செய்து அதன் மூலம் அமைதியை நிலைநாட்டுவதற்கு  என்றுக் கூறி 1982-இல் தமிழக அரசால் இயற்றப்பட்டது குண்டர் தடுப்புச் சட்டம் எனப்படும் தமிழ்நாடு வன்செயல்கள் தடுப்புச் சட்டம்.

தமிழகத்தில் நிகழும் தொடர் குற்றங்களை தடுக்கும் பொருட்டு குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யும் அதிகாரம் இச்சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படக் கூடியவர் ஓராண்டு காலம் பிணையில் வெளிவர முடியாத வகையில் சிறையில் அடைக்கப்படுவார்.

Goondas

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவருக்கு எவ்வித நீதிமன்ற விசாரணையுமில்லை என்பதால், கைது செய்யப்பட்டவர் தனது கைது நடவடிக்கைக்கு எதிராக, ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி, ஒரு ஓய்வுப் பெற்ற நீதிபதி மற்றும் ஒரு அமர்வு நீதிபதி ஆகியோரைக் கொண்ட நிர்வாக விசாரணைக் குழு மட்டுமே அணுக முடியும். கைதுக்கு எதிரான முறையீடு நிர்வாக விசாரணைக்குழுவால் தள்ளுபடி செய்யப்பட்டால் பின்னர் உயர்நீதிமன்றத்தை அணுகலாம்.

திருட்டு வீடியோ, சி.டி குற்றம் ஆகியவை 2004ம் ஆண்டும், மணல் கடத்தல் மற்றும் குடிசை நில அபகரிப்பு ஆகியவை 2006ம் ஆண்டும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன. பின்னர், மேற்கொள்ளப்பட்ட இரண்டு திருத்தங்களில் தொடர் குற்றவாளி என்ற வரையறை நீக்கப்பட்டதுடன், சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாகக் கூறி கைது செய்யும் வாய்ப்பையும் வழங்குகிறது.