செவ்வாய், 23 மே, 2017

உருவானது இந்திய விவசாயிகள் கமிட்டி; டெல்லியில் ஜூன் 9ல் பிரமாண்ட போராட்டம்! பீதியில் மத்திய அரசு !

தமிழக விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி, நதிகள் இணைப்பு, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம்  நடத்தினர்.
விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 40 நாட்களுக்கும் மேலாக போராட்டம் தொடர்ந்தது. அவர்களது போராட்டத்துக்கு பா.ஜ.கவைத் தவிர தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு அளித்தன. இருப்பினும் விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து மத்திய அரசு உறுதி ஏதும் அளிக்கவில்லை.
இந்நிலையில், டெல்லியில் போராடிய விவசாயிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
ஆனால், மே 21க்குள் மத்திய அரசு உத்தரவாதம் அளிக்காத பட்சத்தில் மீண்டும் போராட்டத்தை கையில் எடுப்போம். இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளை திரட்டி ஒன்றிணைந்து போராடுவோம் என்று விவசாயிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற பல்வேறு மாநில விவசாயிகள் சந்திப்பில் இந்தியாவிலுள்ள சுமார் 500 விவசாயிகள் சங்கங்களை இணைத்து ஒருங்கிணைப்பு கமிட்டி உருவாக்கப்பட்டுள்ளது. இக்கமிட்டியின் தென்னிந்திய பிரிவுக்கான அமைப்பாளராக அய்யாக்கண்ணு நியமிக்கப்பட்டுள்ளார்.
நாடுமுழுவதும் உள்ள விவசாயிகளை திரட்டி ஜூன் 9ம் தேதி கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் பிரமாண்ட போராட்டம் நடத்த விவசாயிகள் ஒருங்கிணைப்பு கமிட்டி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. போராட்ட வடிவம் குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் கடந்த மாதம் போராட்டம் நடத்தியதன் தொடர்ச்சியாக இந்த கமிட்டி உருவாக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்து போராட்டங்களை நடத்த வேண்டும் என மற்ற மாநில விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இக்கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

Related Posts: