புதன், 17 மே, 2017

கிரானைட் குவாரியில் ஆடுமேய்க்கும் பெண் பிணமாக கண்டெடுப்பு!

கிரானைட் குவாரியில் ஆடுமேய்க்கும் பெண் பிணமாக கண்டெடுப்பு!


விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கிரானைட் குவாரியில் பெண் பிணம் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து பொதுமக்கள் கிரானைட் குவாரியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள காள பெருமாள்பட்டியில் பழனிவேல் என்பவர்க்குச் சொந்தமான சிவஜெயம் கிரானைட் குவாரி  இயங்கி வருகிறது. இங்கு 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் குவாரியின் உட்புறம் இறந்த நிலையில் பெண் சடலம் கிடப்பதாக குவாரியின் மேலாளர் சங்கர் என்பவர் அப்பையநாயக்கன்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இறந்த பெண் அதே கிராமத்தைச் சேர்ந்த முத்துவேல் என்பவரின் மனைவி மாரீஸ்வரி என்பதை அறிந்த கிராம மக்கள் போலீசார் வருவதற்கு முன்பாகவே கிரானைட் குவாரியை முற்றுகையிட்டனர்.  

20 அடி உயரத்திற்கு கற்கள் குவிக்கப்பட்ட சுற்றுச் சுவர் உள்ள குவாரிக்குள் சடலம் எப்படி வந்தது எனத் தங்களுக்குத் தெரியாது என கிரானைட் குவாரி ஊழியர்கள் கூறியதை நம்ப மறுத்த கிராம மக்கள் முப்பது ஊழியர்களையும் குவாரிக்கு உள்ளேயே சிறைபிடித்தனர். இதனையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பிரேத பரிசோதனையில் மாரிஸ்வரி செல்போனை தனது மேலாடையில் வைத்திருந்ததாகவும் அதில் மின்னல் தாக்கியதால் அவர் உயிரிழந்ததாகவும் தெரியவந்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.