செவ்வாய், 23 மே, 2017

மீண்டும் ஒரு ஏவுகணை சோதனையை நடத்திய வடகொரியா! May 23, 2017

மீண்டும் ஒரு ஏவுகணை சோதனையை நடத்திய வடகொரியா!


அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் எதிர்ப்பை மீறி மீண்டும் ஒரு ஏவுகணைச் சோதனையை வட கொரியா வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது.

இந்த சோதனை வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் முன்னிலையில் நேற்று நடத்தப்பட்டதாக அந்நாட்டின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏவுகணையின் தாக்கும் திறன் குறித்தும், துல்லியம் பற்றியும் இந்த சோதனையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையை அடுத்து, Pukguksong-2 என்ற இந்த ஏவுகணையை ராணுவத் தாக்குதலுக்குப் பயன்படுத்துவதற்கான அனுமதியை கிம் ஜோங் உன் அளித்திருப்பதாகவும் வட கொரிய அரசு செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 

ஏவுகணைக்குப் பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பம் முழு திருப்தியை அளித்திருப்பதால், இவற்றை பெருமளவில் உற்பத்தி செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதன் மூலம் ராணுவ வலிமை மேலும் அதிகரிக்கும் என்றும் அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. Hwasong-12 என்ற ஏவுகணைச் சோதனையை கடந்த வாரம் சோதித்த வட கொரியா, தற்போது Pukguksong-2 என்ற ஏவுகணையை சோதித்துள்ளது. தென் கொரியா மற்றும் ஜப்பானின் எந்த ஒரு பகுதியையும் தாக்கும் அளவுக்கு இவை திறன் கொண்டவை என தகவல் வெளியாகியுள்ளது.