“விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்வோம் என்ற பேச்சுக்கே இடமில்லை. வேண்டுமானால், மாநில அரசு தள்ளுபடி செய்துகொள்ளட்டும். இதைப் பற்றி இதற்கு மேல் பேச எதுவும் இல்லை” என்று உறுதியான மொழியில் சொல்லிவிட்டார் நமது நிதி அமைச்சர் அருண் ஜெட்லி. உங்களுக்கெல்லாம் எப்படி என்று தெரியவில்லை... எனக்கு அவரது சொல்லாடல்களைக் கேட்க மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. ‘அட... எவ்வளவு கறாரான ஒரு கடன்காரரை நமது நிதி அமைச்சராகப் பெற்றுள்ளோம். நாட்டின் பொருளாதாரத்தின் மீது அவருக்கு எவ்வளவு அக்கறை... விவசாயிகள் செத்தால் என்ன... கூட்டம் கூட்டமாக நிலத்தைக் கைவிட்டுப் பெருநகரங்களுக்குப் புலம்பெயர்ந்தால் என்ன... எனக்கு தேசம்தான் முக்கியம்... வளர்ச்சிதான் முக்கியம்’ என்ற நிதி அமைச்சரை நாம் பெற்றிருக்கிறோம். நிச்சயம் தேசம் வளர்ந்துவிடும் என்று எண்ணக் கோட்டைகளை எழுப்பிக்கொண்டிருந்தபோதுதான், கார்ப்பரேட் கடன் தள்ளுபடி தொடர்பான பாழாய்ப்போன தரவுகள் என் கண்ணில்பட்டன. அதை மட்டும் பார்த்திருந்தால்கூட, தேசத்தின் வளர்ச்சிக்காக இந்தத் தள்ளுபடி என்று நானும் கடந்துசென்றிருப்பேன். துரதிர்ஷ்டமாக நம் தேசத்தின் பொருளாதார அறிஞர்களின் பேச்சுகளையும் படிக்க நேரிட்டது. அதன் விளைவாகத்தான் இதை எழுத நேரிட்டுவிட்டது.
“கார்ப்பரேட் கடன்களும்... விவசாயக் கடன்களும்!”
“அச்சுறுத்தும் நீதி”
விவசாயிகளின் கடன் குறித்து பேசிய ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் தலைவர், அருந்ததி பட்டாச்சாரியா, “தொடர்ந்து விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி செய்துகொண்டே இருந்தால், மொத்த வங்கிக் கடன் ஒழுங்கும் கெட்டுவிடும்'' என்று பதறுகிறார். அப்படியானால், பெரு நிறுவனங்களுக்குக் கடன் தள்ளுபடி செய்தால், வங்கி ஒழுங்கு கெடாதா... என்று உங்களுக்குள் கேள்வி எழுகிறதா? கொஞ்சம் பொறுங்கள். அதற்கு நம் பொருளாதார வல்லுநர்கள் பதில் வைத்திருக்கிறார்கள்.
தேசத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகரான அரவிந்த் சுப்பிரமணியம், “இப்படித்தான் முதலாளித்துவம் வேலை செய்யும். நீங்கள் பெருநிறுவனங்கள் வாங்கிய கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும். தொடர்ந்து அவர்களை மன்னிக்க வேண்டும். பெருநிறுவனங்களை இப்படிக் காப்பது ஊழலுக்கும்... ஒட்டுண்ணிப் பொருளாதாரத்துக்கும் வழிவகுக்கும். ஆனால், நமக்கு வேறு வழியில்லை” என்கிறார்.
அதாவது, பெருநிறுவனங்கள் தொடர்ந்து செய்யும் தவறுகளை மன்னிக்க வேண்டுமாம்... அரசின் தவறான கொள்கைகளுக்குப் பலியாகி, கடனாளி ஆகும் விவசாயிகளைக் காக்கக் கூடாதாம்.. இந்த நீதி... இந்தியாவின் நீதி அச்சுறுத்துகிறது.
“விவசாயக் கடன்களும்... நமது புரிதலும்”
கார்ப்பரேட் எத்தனை பேருக்கு வேலை வழங்குகிறது... இந்தியாவின் பொருளாதாரம், அந்நியச் செலாவணியை உயர்த்துகிறது.. அவர்களுக்குக் கடன் வழங்கினால்தான் என்ன... கடன் தள்ளுபடி செய்தால்தான் என்ன...? - இது, எதார்த்த இந்திய மனதின் புரிதல் மற்றும் கேள்வி.
இதே கேள்வியை அண்மையில் இயற்கை வேளாண் அறிஞர் பாமயனுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது முன்வைத்தேன். அவர் சொன்னது இதுதான், “எங்கள் ஊரில் ஒரு விவசாயி, தன் வேளாண் நிலத்தில் ஏறத்தாழ 20 பேருக்குத் தினமும் வேலைவாய்ப்பு தருகிறார். அவரது முதலீடு 20 லட்சம் ரூபாய்தான்... ஆனால், பல லட்சம் கோடி வரிச் சலுகைகள், உள்கட்டமைப்பு வசதிகள், பல லட்சம் கோடி கடன், பின் அதனைப் போக்கெழுதுதல்... இவை அனைத்தையும் அனுபவித்து, பெரு நிறுவனங்கள் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி இருக்கின்றன? கணக்கிட்டுப் பார்த்தால், ஒரு கோடி ரூபாய் செலவு செய்து ஒரு நபருக்குக் கடன் வழங்கி இருக்கிறது. இது முட்டாள்தனமாகத் தெரியவில்லையா...” என்று கேள்வி எழுப்பினார். இதையேதான் சூழலியல் செயற்பட்டாளர் பியூஷும் தன் தோட்டத்தில் நிரூபித்துக்கொண்டிருக்கிறார். மறைந்த வேளாண் செயற்பாட்டாளர் சிவசாமியும் இதையேதான் ஒரு சந்திப்பின்போது சொன்னார்.
வேளாண்மையில் லாபம் வராது என்பது உண்மையென்றால், நம் பெரு நிறுவனங்கள் லட்சக்கணக்கான ஏக்கரில் ஆப்ரிக்காவில் விவசாயம் செய்வது ஏன்..? வேளாண்மை என்பது வாழ்வியல் என்றெல்லாம் கவித்துவமாகப் பேசாமல், பொருளாதாரரீதியாகக் கணக்கிட்டால்கூட உண்மையில், வேளாண்மை லாபம் தரக்கூடியதுதான்... தேசத்தின் வளர்ச்சிக்குப் பங்களிக்கக் கூடியதுதான். விவசாயத்தையும், விவசாயிகளையும் முடமாக்கிவைத்திருப்பது நமது அரசாங்கமும், அதன் கொள்கைகளும்தான்!
Niayas Ahmed
http://www.vikatan.com/news/coverstory/92968-all-we-have-to-know-about-farmers-loan-waiver.html