வெள்ளி, 30 ஜூன், 2017

திருவிடைமருதூர் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி குழாய் உடைந்து எண்ணெய் கசிவு! June 30, 2017




தஞ்சை மாவட்டம் கதிராமங்கலம் அருகே பதிக்கப்பட்டிருந்த  ஓஎன்ஜிசி குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக அப்பகுதியில் எரிபொருள் கசிவு ஏற்பட்டிருப்பது, பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கதிராமங்கலம் பகுதியில் ஓஎன்ஜிசி குழாய் பதிப்பதற்கு பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்த வந்த நிலையில், அதனைக் கண்டுகொள்ளாமல் கடந்த ஜூன் 1ந் தேதி 2 ஆயிரம் போலீசார் உதவியுடன் ஓஎன்ஜிசி நிறுவனம் அந்த பணிகளை மேற்கொண்டது. 

இந்நிலையில்  கதிராமங்கலம்-பந்தநல்லூர் இடையே ஓஎன்ஜிசி எரிபொருள் குழாயில் இன்று ஏற்பட்ட வெடிப்பு காரணமாக அதிலிருந்து எரிபொருள் வெளியேறியது. எரிபொருள் அப்பகுதி முழுவதும் பரவிக் காணப்பட்ட நிலையில், பொதுமக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  

தங்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, எரிபொருளை அப்பகுதி வழியாகக் கொண்டு சென்ற ஒஎன்ஜிசி நிறுவனத்திற்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

வெடிப்பு குறித்து தகவல் அறிந்ததும், அங்கு முன் எச்சரிக்கைகளை மேற்கொள்ள தீயணைப்புத்துறையினரும் ஓஎன்ஜிசி நிறுவன அதிகாரிகளும்  குவிந்தனர். அப்போது அவர்களை முற்றுகையிட்ட பொதுமக்கள், எரிபொருள் குழாயை அங்கிருந்து முழுமையாக அகற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.