செவ்வாய், 27 ஜூன், 2017

அம்பலப்பட்ட மத்திய பிரதேச போலீசாரின் ஜோடிப்பு வழக்கு நடவடிக்கை! June 26, 2017




மத்திய பிரதேசத்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடியதாக 15 பேர் மீது போடப்பட்ட தேசதுரோக வழக்கு ஜோடிக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.

கடந்த ஜூன் 18ம் தேதி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் இந்தியா 180 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. 

இந்நிலையில், இப்போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே “பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடுபவர்கள் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள்!” என ஆங்கில ஊடகத்தை சேர்ந்த பிரபல நெறியாளர் ஒருவர் தனது நிகழ்ச்சியொன்றில் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் இதற்கு பதிலடி தரும் வகையில் பதிவுகளை இட்டு வந்தனர். “விளையாட்டை விளையாட்டாக பார்க்காமல் அதனை தேசப்பற்றுடன் தொடர்புபடுத்துவது பிழையானது!” என்று பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

இதனிடையே, மத்திய பிரதேசத்தின் பர்ஹான்பூரில் உள்ள ஒரு கிராமத்தில் பாகிஸ்தானின் வெற்றியை கொண்டாடியதாக ஜூன் 20ம் தேதி 15 இஸ்லாமியர்கள் மீது தேசதுரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. 15 பேரும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பியதாகவும் ஆரம்பக் கட்டத்தில் போலீசார் தகவல் அளித்தனர்.

15 பேரும் பாகிஸ்தானின் வெற்றியை பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கி கொண்டாடியதாக ஷாபுரா காவல்நிலையத்திற்கு சம்பவத்தை நேரில் பார்த்த சுபாஷ் என்பவர் தொலைபேசியில் அழைத்து புகார் அளித்ததாகவும், அதன் அடிப்படையிலேயே வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

பல்வேறு ஊடகங்களிலும் இதுதொடர்பான செய்திகள் வெளியாகி விமர்சனத்தை சந்தித்த நிலையில், இரு தினங்களில் (ஜூன் 22) 15 பேர் மீதும் போடப்பட்ட தேசதுரோக வழக்கை காவல்துறையினர் கைவிட்டனர். “தேசதுரோகம் என இந்திய தண்டனை சட்டத்தின்  124-A பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு கைவிடப்பட்டு, சமூக நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவித்தல் என்ற குற்றச்சாட்டின் பேரில், இந்திய தண்டனை சட்டத்தின் 153 (a) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என போலீசார்  தெரிவித்தனர்.

இந்நிலையில், இவ்விவகாரத்தில் புதிய திருப்பமாக, ஷாபுரா காவல்நிலையத்தில் புகார் அளித்ததாக கூறப்பட்ட சுபாஷ் விளக்கம் அளித்துள்ளார். அதில், சம்பவம் நடந்ததாக கூறப்பட்ட தினத்தில், தான் அந்த ஊரிலேயே இல்லை என்றும், வேறு ஒரு பிரச்சனை தொடர்பாக ஷாபுரா போலீசில் புகார் அளிக்க தனது தந்தையுடன் வந்திருந்ததாகவும், அப்போது போலீசாரில் சிலர் தனது செல்போனை பிடுங்கி காவல்துறை எண்ணான 100-க்கு அழைத்து புகார் அளித்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இதன்மூலம், 15 பேர் மீதும் போலீசார் போலியாக வழக்கை ஜோடித்துள்ளது தெரியவந்துள்ளது.

மேலும், தனது இந்த குற்றச்சாட்டில் நம்பிக்கை இல்லையென்றால் இதுதொடர்பாக விசாரணை நடத்தலாம் என்றும், ஷாபுரா காவல்நிலையத்திற்கு அழைப்புவந்ததாக கூறப்பட்ட நேரத்தில் என்னுடைய செல்போன் எங்கிருந்தது என செல்போன் நெட்வொர்க் மூலம் ஆய்வு செய்தால் தொலைபேசி அழைப்பு காவல்நிலையத்திற்கு உள்ளிருந்து வந்த உண்மை வெளிவரும் என்றும் சுபாஷ் குறிப்பிட்டுள்ளார். 

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பர்ஹான்பூர் காவல்துறை கண்காணிப்பாளர், சுபாஷின் குற்றச்சாட்டு குறித்து தனக்கு ஏதும் தெரியாது என்றும், முறைப்படியாக எழுத்துப்பூர்வமாக அவர் புகார் அளித்தால் அதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.