வெள்ளி, 30 ஜூன், 2017

ஜி.எஸ்.டி-க்கு விரிவாக்கம் தெரியாமல் திணறிய அமைச்சர்! June 30, 2017




நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட உள்ள நிலையில், ஜிஎஸ்டிக்கு விரிவாக்கம் தெரியாமல் உத்தரபிரதேச அமைச்சர் திணறிய சம்பவம் திகைப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப்பிரதேச சமூகநலத்துறை அமைச்சர் ரமாபதி சாஸ்திரியிடம் பத்திரிகையாளர்கள் ஜிஎஸ்டி விரிவாக்கம் குறித்து கேள்வி எழுப்பினர். இதனை சற்றும் எதிர்பார்க்காத அமைச்சர், ஜிஎஸ்டிக்கு விரிவாக்கம் தெரியாமல் தடுமாறினார். 

அமைச்சரின் பின்னால் நின்றுக் கொண்டிருந்த நபர் ஜி.எஸ்.டிக்கான விளக்கத்தை அவருக்கு ரகசியமாக கூறிய போதும், அதை புரிந்துக் கொண்டு செய்தியாளரின் கேள்விக்கு அவரால் பதிலளிக்க முடியாததால் சற்று நேரம் இறுக்கமான சூழல் நிலவியது.
 

பின்னர் ஜி.எஸ்.டி குறித்து தனக்கு தெரியும் என்றும், எனினும், இது குறித்து முழுமையாக அறிய முயற்சி செய்து வருவதாகவும் கூறினார். உத்தரபிரதேச அமைச்சர்களுக்கு ஜி.எஸ்.டியின் முக்கியத்துவம் மற்றும் சாதக-பாதகங்கள்  குறித்து விளக்கம் அளிக்க அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்த போதிலும் அம்மாநில அமைச்சர் ஒருவர், ஜி.எஸ்.டி-க்கு விரிவாக்கம் கூட தெரியாதமல் விழித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.