வெள்ளி, 30 ஜூன், 2017

தனியார் தோட்டத்தில் மாம்பழம் பறித்ததால் சித்ரவதை செய்து கொல்லப்பட்ட 8 வயது பெண்! June 30, 2017

தனியார் தோட்டத்தில் மாம்பழம் பறித்ததால் சித்ரவதை செய்து கொல்லப்பட்ட 8 வயது பெண்!


பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் தனியார் தோட்டத்தில் மாம்பழம் பறித்ததால் 8 வயது பெண் சித்ரவதை செய்து கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா - நேபாளம் எல்லையில் அமைந்துள்ள தேண்டிக்ரி கிராமத்தில்தான் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. இப்ராஹிம் ஷஃபி என்பவரின் 8 வயது மகளான அமெருன் காடென், தந்தையுடன் கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கிவிட்டு வீட்டுக்கு வந்துக் கொண்டிருந்துள்ளனர். 

தந்தையை முன்பாக வீட்டுக்கு செல்லுமாறு கூறிய சிறுமி, தந்தைக்கு தெரியாமல் அருகேயிருந்த தனியார் தோட்டத்தில் மாம்பழங்கள் பறிக்கச் சென்றுள்ளார். மகளுக்காக பொருட்களை வாங்கிக் கொண்டு வீடு சென்ற தந்தை, மாலையாகியும் மகள் வீட்டுக்கு வராததால் தேடத்தொடங்கியுள்ளார்.

ஊரார் தெரிவித்த தகவலின் பேரில், அருகேயிருந்த குளக்கரையில் சென்று பார்த்தபோது ரத்தகாயங்களுடன் அமெருன் காடென் சடலமாக கிடந்துள்ளார். அதிர்ச்சியில் உறைந்த இப்ராஹிம் ஷஃபி அருகே சென்று பார்த்த போது, சிறுமியின் உடல் கத்தியால் கிழிக்கப்பட்டும், மின்சாரம் செலுத்தப்பட்டும் சித்ரவதை செய்யப்பட்டது தெரியவந்தது.

மாம்பழம் பறிக்கச் சென்ற சிறுமியை தனியார் மாம்பழத்தோட்ட உரிமையாளர் சஞ்சய் மேத்தாவும், அவருடன் இருந்தவர்களும் சித்ரவதை செய்து கொன்றுள்ளதாக குற்றம்சாட்டும் இப்ராஹிம் ஷஃபி, மாம்பழத்தோட்டத்தில் ரத்தக்கரை இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக, சித்ரவதை செய்து கொல்லப்பட்ட அமெருன் காடென் தந்தை இப்ராஹிம் ஷஃபி அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாகியுள்ள சஞ்சய் மேத்தா மற்றும் அவரது உதவியாளர் வினோத் மேத்தாவையும் தேடி வருகின்றனர்.