செவ்வாய், 27 ஜூன், 2017

தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி! June 27, 2017

தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!


அரசு பள்ளிகளில், அரசு ஊழியர்களின் குழந்தைகளை சேர்ப்பதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது என, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.அரசு ஊழியர்கள் தங்களது குழந்தைகளை ஏன் தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர் என்றும், தனியார் பள்ளிகளை பெற்றோர் நாடக் காரணம் என்ன எனவும் நீதிபதி அப்போது வினவினார். நேரத்திற்கு பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? பள்ளி நேரத்தில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்படுமா எனவும் அவர் கேள்வி எழுப்பினார். 

2012ம் ஆண்டுக்கு பிறகு ஆங்கில வழி வகுப்புகள் எத்தனை தொடங்கப்பட்டுள்ளன என்றும், ஆங்கில வழி வகுப்புகளை நடத்த பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்களா? என்றும்  அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதி கிருபாகரன் முன்வைத்தார். இந்த கேள்விகளுக்கு  ஜூலை 14ம் தேதிக்குள் பதில் அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.