ஞாயிறு, 8 செப்டம்பர், 2024

மீண்டும் வன்முறை – ஆளுநருடன் மணிப்பூர் முதலமைச்சர் சந்திப்பு!

 

8 9 24 


மணிப்பூரில் மீண்டும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு வரும் முதலமைச்சர் பிரேன் சிங் அம்மாநில ஆளுநரை சந்தித்துள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் குக்கி-மெய்தி இன குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு கலவரமானது. தொடர்ந்து துப்பாக்கி சூடு, தீவைப்பு போன்ற வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இது போன்ற பரபரப்பான சூழலுக்கு இடையே அங்கு சமீபத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவும் நடத்தி முடிக்கப்பட்டது. இருந்தபோதிலும் வன்முறை சம்பவங்கள் முடிவுக்கு வராமல் அவ்வப்போது தொடர்ந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் குகி கிளர்ச்சியாளர்கள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இது மெய்தி இனமக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியாகும். பிஷ்ணுபூர் மாவட்டத்தின் மொய்ரெங் பகுதியில் உள்ள முன்னாள் முதல்வர் மைரெம்பாம் கொய்ரெங் வீட்டு வளாகத்தில் நேற்று மதியம் ராக்கெட் குண்டு வீசப்பட்டது. இந்த குண்டு, பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இதில் அங்கு பூஜை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த முதியவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 5 பேர் இந்த வெடிகுண்டு தாக்குதலில் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராக்கெட் குண்டு விழுந்த இடத்திற்கு 2 கிலோமீட்டர் தூரத்தில் இந்திய ராணுவ தலைமையகம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து இரு சமூகத்தினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் 3 பயங்கரவாதிகள் உள்பட ஆயுதம் தாங்கிய 5 பேர் உயிரிழந்தனர். அங்கு மீண்டும் ஏற்பட்ட வன்முறையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மணிப்பூரில் ஏற்பட்ட புதிய கலவரம் தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் பிரேன்சிங் அவசர ஆலோசனை நடத்தினார். சட்டம்-ஒழுங்கு நிலவரம் தொடர்பாக அவர் இம்பாலில் உள்ள தனது இல்லத்தில் மாநில அமைச்சர்கள், ஆளும் கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் ஆகியோருடன் நேற்று இரவு ஆலோசனையில் ஈடுபட்டார்.


இந்த அவசர கூட்டத்துக்கு பிறகு முதலமைச்சர் பிரேன்சிங், மணிப்பூர் ஆளுநர் லட்சுமன் ஆச்சார்யாவை தனியாக சந்தித்தார். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் பிரேன்சிங், 20 எம்.எல்.ஏ.க்களுடன் கவர்னர் லட்சுமன் ஆச்சார்யாவை இன்று காலை 11 மணியளவில் சந்தித்தார். இந்த சந்திப்பு 1 மணி நேரம் நடைபெற்றது.

source https://news7tamil.live/violence-again-manipur-chief-minister-meets-the-governor/