ஞாயிறு, 8 ஜனவரி, 2017

“உங்க எல்லோரையும் ரேப் பண்ணிடுவேன்!” - காக்கிகளின் காட்டு தர்பார்

ஜூனியர் விகடன்Jan,1 2017
“உங்க எல்லோரையும் ரேப் பண்ணிடுவேன்!” - காக்கிகளின் காட்டு தர்பார்
“போராட்டத்துல கலந்துகிட்ட ஒரு பெண்ணின் மார்பைப் பிடிச்சு அமுக்கி, வக்கிரத்துடன் எஸ்.ஐ ரவி சிரிச்சார். அதை எதிர்த்துக்கேட்டதால், எல்லா தோழர்களையும் போலீஸார் அடிச்சு நொறுக்கினாங்க. எங்களை போலீஸ் வேன்ல ஏத்திக்கிட்டு ஒரு திருமண மண்டபத்துல அடைச்சு வெச்சு கொடூரமா சித்ரவதை செஞ்சாங்க. ஒருத்தரை 20 போலீஸார் சூழ்ந்துகிட்டு லத்திகள் நொறுங்குற வரை அடிச்சாங்க. இப்பவும் போலீஸ் என்னை ஃபாலோ பண்ணிக்கிட்டே இருக்கு” என்று அச்சம் குறையாமல் பேசுகிறார் இளம்பெண் சுசி.
மத்திய அரசின் ‘செல்லாக்காசு’ திட்டத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சென்னை மேடவாக்கத்தில் டிசம்பர் 31-ம் தேதி போராட்டம் நடத்தினர். பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற அந்தப் போராட்டத்தில்தான், போலீஸார் கோரத்தாண்டவம் ஆடியுள்ளனர்.
அதில், போலீஸாரின் மிக மோசமாக தாக்குதலுக்கு உள்ளான ஒரு பெண், “அமைதியான முறையில்தான் போராட்டம் நடந்துச்சு. திடீரென, டிராஃபிக் ஜாம் ஆவதாக போலீஸ்காரங்க பொய்யாகச் சொன்னாங்க. அப்புறம், போராட்டத்துல கலந்துகிட்ட பெண்களை ஆபாசமாத் திட்டினாங்க. ஒரு பெண்ணோட மார்பை பிடிச்சப்போ, ‘ஏன் இப்படி மோசமா நடந்துக்கிறீங்க’னு தோழர்கள் கேட்டாங்க. உடனே, எல்லோரையும் கண்மூடித்தனமா தாக்க ஆரம்பிச்சுட்டாங்க. எட்டுத் தோழர்களை ஒரு வேனில் ஏத்திக்கிட்டு, வேனின் கதவு, ஜன்னலை மூடிட்டு அவங்களை காட்டுமிராண்டித்தனமா அடிச்சாங்க. எங்களை ஒரு திருமண மண்டபத்துல அடைச்சுவெச்சாங்க. அங்கே, சொல்றதுக்கு நாக்கூசும் அளவுக்கு ஆபாசமாகவும் காட்டுமிராண்டித்தனமாவும் போலீஸ்காரங்க நடந்துக்கிட்டாங்க. எங்க சங்கத்தோட மாவட்டச் செயலாளரை, கால்களை விரிக்கச்சொல்லி அவரது பிறப்பு உறுப்பில் பூட்ஸ் காலால் உதைச்சாங்க. மண்டபத்தைச் சுற்றி `ஓடுங்கடா’ன்னு சொல்லி, ஓடவிட்டு லத்திகள் உடையிற அளவுக்கு அடிச்சாங்க. ‘உங்களை ரேப் பண்ணிடுவேன்’ என்று எங்களை மிரட்டிய எஸ்.ஐ ரவி, எங்களோட அந்தரங்க உறுப்புகளைப் பிடிப்பதற்கு வந்தார்” என்றார் அதிர்ச்சியுடன்.
பாதிக்கப்பட்ட இன்னொரு பெண், “எங்களைப் பார்த்து, ‘காசு கொடுத்தா வருவியா?’னு அசிங்கமா கேட்டார் எஸ்.ஐ ரவி. ஆண் போலீஸார் எங்களை ஆபாசமாகப் பேசியதையும், தாக்கியதையும் சிரித்தபடியே பெண் போலீஸார் வேடிக்கை பார்த்தாங்க. ‘ஏண்டி... எங்க எஸ்.ஐ உன் மார்பை பிடிச்சதா சொல்றியே. நீங்க என்ன பெரிய ரதிகளா? எங்க எஸ்.ஐ., இன்ஸ்பெக்டரோட பெண்டாட்டிகள்கிட்ட இல்லாததா உங்ககிட்ட இருக்கு?’ என்று சொல்லிக்கிட்டே துடைப்பத்தை எடுத்து அடிச்சாங்க. நாங்க எத்தனையோ போராட்டங்கள்ல கலந்துகிட்டு, போலீஸ் அடக்குமுறைகளை சந்திச்சிருக்கோம். ஆனா, இந்த அளவுக்கு கீழ்த்தரமாக போலீஸ் நடந்துக்குறதை இப்போதான் பார்க்கிறோம்” என்றார்.
“வேனில் ஏற்றிச்செல்லப்பட்ட எட்டு பேரின் கதி என்ன ஆனது என்பது தெரியாததால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சி.ஐ.டி.யு., ஜனநாயக மாதர் சங்கம் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போலீஸாரிடம் வந்து விசாரித்துள்ளனர். சரியான பதில் கிடைக்காததால் மறியலில் இறங்கியுள்ளனர். உடனே, கூடுதலாக போலீஸை வரவழைத்து, மறியலில் ஈடுபட்டவர்களை அடித்துநொறுக்கி உள்ளனர். பள்ளிக்கரணை இன்ஸ்பெக்டர் நடராஜ் தலைமையில் நடந்த இந்தத் தாக்குதலில், சி.பி.எம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் செல்வா உட்பட பலருக்கு மண்டை உடைந்தது. பிறகு, 14 பேர் கைதுசெய்யப்பட்டு இரவு 10.30 மணி அளவில் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்” என்கிறார் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பாலா.
இந்தத் தாக்குதலைப் புகைப்படம் எடுத்த ‘தீக்கதிர்’ நாளிதழின் மூத்த நிருபர் கவாஸ்கரும் தாக்குதலில் இருந்து தப்பவில்லை. “கேமராவைக் கொடு என்று போலீஸார் என்னைக் கடுமையாகத் தாக்கினர். வலிதாங்க முடியாமல் கேமராவை கீழேவிட்டதும், கேமராவை எடுத்துச் சென்றுவிட்டனர். நான் எடுத்த புகைப்படங்களை அழித்துவிட்டுக்கொடுத்தனர்” என்றார்.
“இன்ஸ்பெக்டர் நடராஜ் மீது லாக்-அப் மரணம் மற்றும் மனித உரிமைகள் மீறல்கள் எனப் பல புகார்கள் உள்ளன. அதில் வாலிபர் சங்கம் தலையிட்டு போராட்டங்களை நடத்தியுள்ளது. அந்த ஆத்திரத்தில்தான் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள்” என்கிறார் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் தீபா.
இன்ஸ்பெக்டர் நடராஜிடம் கருத்துக் கேட்பதற்காக அவரது செல்போனுக்குத் தொடர்ச்சியாகத் தொடர்புகொண்ட போது, அவரது வாகன ஓட்டுநரே எடுத்துப் பேசினார். எஸ்.ஐ. ரவி போனை எடுக்கவே இல்லை.
இந்தத் தாக்குதல் தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து போலீஸாருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஒரு பெண்ணின் தலைமையிலான கட்சி நடத்தும் ஆட்சியில், போலீஸ் நடத்தியுள்ள இந்த வெறியாட்டம்... வெட்கக்கேடு!
- ஐஷ்வர்யா
படங்கள்: பா.காளிமுத்து

Related Posts: