செவ்வாய், 23 மே, 2017

இளைஞரை கேடயமாக பயன்படுத்திய ராணுவ அதிகாரிக்கு ‘மெடல்’ May 23, 2017

இளைஞரை கேடயமாக பயன்படுத்திய ராணுவ அதிகாரிக்கு ‘மெடல்’


ஜம்மு காஷ்மீரில் இளைஞர் ஒருவரை ராணுவ ஜீப்பில் மனித கேடயம் போன்று கட்டிய ராணுவ அதிகாரிக்கு சிறந்த வீரருக்கான பதக்கம் கொடுக்கப்பட்டுள்ளது சர்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகர் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 9ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இந்நிலையில் வாக்குப்பதிவு தினத்தன்று பத்காம் மாவட்டத்தில் உள்ள பீர்வான் பகுதியில் வாலிபர்கள் பாதுகாப்பு படை வீரர்கள் மீது கல்வீச்சில் ஈடுபட்டனர். இதையடுத்து பாதுகாப்பு படை வீரர்கள் கல்வீச்சில் ஈடுபட்டவர்களில் ஒரு வாலிபரை பிடித்து தங்கள் ஜீப்பின் முன்பகுதியில் கட்டி அவரை மனித கேடயமாக பயன்படுத்திய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த காட்சியைக் கண்டு காஷ்மீர் மனித உரிமை அமைப்புகள் கொந்தளித்தன. மாநில அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் வெளியிட்டிருக்கின்றன. இந்த ஜீப் மறுவாக்குப்பதிவு நடந்து கொண்டிருந்த குந்திபூரா கிராமத்துக்குச் சென்றிருக்கிறது. அந்த ஜீப்பில் இருந்து வெளிப்படும் ஒரு குரல், "ராணுவத்தின் மீது கல்லெறிபவர்களுக்கு இந்தக் கதிதான் கிடைக்கும்" என்று அந்த நபரைச் சுட்டிக்காட்டி எச்சரிக்கை செய்வதும் அந்தக் காணொளியில் பதிவாகியிருந்தது.

இதையடுத்து, வாலிபரை ஜீப்பில் கட்டியது ராணுவ அதிகாரியான மேஜர்  ‘நிதின் லூடுல் கோகோய்’ என்பது பின்னர் தெரியவந்தது. இந்நிலையில், சர்ச்சையில் சிக்கிய மேஜர்  நிதின் லூடுல் கோகோய்க்கு ராணுவ அதிகாரிகளில் சிறப்பாக செயல்பட்டவருக்கான Chief of Army Staff’s Commendation card எனும் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ராணுவ உயர் அதிகாரிகளிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய போது, “ இது நிதின்  லூடுலின் தொடர் முயற்சிகளுக்காகவும், உழைப்புக்காகவும் கொடுக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளனர். இளைஞரை கேடயமாக பயனப்டுத்திய ராணுவ அதிகாரிக்கு பதக்கங்கள் கொடுத்து பாராட்டு தெரிவித்திருப்பது புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.