சனி, 17 ஜூன், 2017

பாப்தா விருதை வென்ற அந்த காட்சிகள் போலியானவை! June 17, 2017

பாப்தா விருதை வென்ற அந்த காட்சிகள் போலியானவை!


கடந்த ஆண்டு பிபிசியில் வெளியான உடும்பு ஒன்றை பாம்புகள் வேட்டையாட துரத்திச்செல்லும் காட்சிகள் போலியானவை என அந்நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

பிபிசி தொலைக்காட்சியின் Planet Earth-II எனும் நிகழச்சி உலகப் புகழ்பெற்றதாகும். இயற்கையை பற்றியும், விலங்குகள் பற்றியும் மனிதர்கள் அறிந்திராத பல சுவாரசிய நிகழ்வுகளை துல்லியமாக படம்பிடித்து ஆவணப்படமாக இந்நிகழ்ச்சியில் வெளியிடப்படும். கடந்த 2016ம் ஆண்டில் உடும்பு ஒன்றை பாம்புகள், இரைக்காக துரத்தும் காட்சிகள் இந்நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டது. ஏறத்தாழ முப்பதுக்கும் மேற்பட்ட பாம்புகள் தன்னை துரத்தும்போது, கண்களில் மிரட்சியுடன் உடம்பு தப்பிச்செலும் அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து 2016ம் ஆண்டிற்கான சிறந்த வீடியோ காட்சிகளுக்கான பாட்தா விருதும் இதற்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் அதிநவீன கேமிராக்களால் படம்பிடிக்கப்பட்ட அந்த காட்சிகள் தத்ரூபமானது இல்லை எனவும் தனித்தனியாக எடுக்கப்பட்ட காட்சிகளை ஒட்டியே அந்த வீடியோ உருவாக்கப்பட்டது எனவும் அந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் எலிசபத் வைட் தெரிவித்துள்ளார். உடும்பு போன்ற உயிரினத்தை பின்தொடர்ந்து அவ்வளவு துல்லியமாக படம்பிடிப்பது மிகவும் சவாலான காரியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்த வீடியோவில் பாம்புகளிடம் தப்பிச்செல்வது ஒரே உடும்பு இல்லை எனவும், வெவ்வேறு உடம்புகளை தனித்தனியாக படம்பிடித்து அந்த காட்சிகள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தயாரிப்பாளரின் அந்த கருத்துகளை மறுத்துள்ள பிபிசி நிறுவனம், அந்த வீடியோ காட்சிகள் உண்மையானவைதான் எனவும் விளக்கமளித்துள்ளது. உடும்பின் கண்களை குளோசப்பில் காண்பிக்கும் காட்சிகள் மட்டுமே தனியாக எடுக்கப்பட்டது எனவும், பாம்புகள் துரத்தும் காட்சிகள் அனைத்தும் உண்மையானது எனவும் பிபிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சர்வதேச அளவில் புகழ்ப்பெற்ற ஊடகமான பி.பி.சி. நிறுவனவே இவ்வாறு செய்திருப்பது, பிற ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் இணையவாசிகள் இடையே கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.